ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 22, 2012

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

1. ஈஸ்வராய குருதேவர் தன்னைப் பற்றி, வெளிப்படுத்திய உண்மைகள்
இங்கு உணர்த்தப்பட்டுவரும் நிலைகளில், ஈஸ்வரபட்டரின் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) நிலை என்ன? என்பதனை அறிந்திட அனைத்து ஆத்மாக்களுக்கும் எண்ணம் தோன்றிடும். எம் நிலையை இங்கே வெளிப்படுத்துகின்றேன்.

ஈஸ்வரபட்டர் என்ற நாமமுடைய, உங்களினால் குருவின் குருவாக, சூட்சம நிலை கொண்டு காணும், எம் நிலையை அறிய, எம் நிலை என்பது ஈஸ்வரபட்டர் என்ற நாமகரணம் கொண்ட அவ்வுடல் ஆத்மாவில், யாம் செயல் கொண்டதையும், எம் சக்தி நிலையை எந்நிலையில் உணர்த்தி வந்தோம் என்பதனை அறியவும், அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசை உண்டு.

இன்று கர்நாடகா மாநிலத்தில், மங்களூருக்கருகில், கன்னட பிராமண குடும்பத்தில், பல நாள் புத்திர பாக்கியமில்லாமல் தவித்து வந்த குடும்பத்தில், முதல் மகனாக ஜெனனம் பெற்றேன்.

ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து, சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில், பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உ:ள்ள கிராமத்தில், அந்த ஊரின் நாமம், அந்த ஊரில் உள்ள கோவிலின் நாமம், அங்குள்ள குடும்பங்களின் நாமம், எல்லாமே ஈஸ்வர நாமத்தை, முதன்மை பெற்றுள்ள சிற்றூர் அது.

பல காலம் புத்திர பாக்கியமில்லாமல், பிறந்த ஈஸ்வரபட்டன் யான். யான் பிறந்த சில மாதங்களிலேயே, தந்தை இறந்துவிட்டார். தாயினால் வளர்க்கப் பெற்று, தாயின் ஜீவிதம் கொண்டு, சிறு கல்வி அறிவும் பெற்று, வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார்.

சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல், தனித்துவிடப்பட்டேன். ஈஸ்வரன் கோவிலில், அந்த ஆண்டவனே அனைத்தும் என்ற நிலையில், எண்ணம் குன்றி, ஜீவிதத்திற்கு, வழியறியாமல், அவ்வாண்டவனைப் பூஜிப்பதிலேயே, எம் ஜீவன் பிரிந்தது.

எம் ஜீவன் பிரிந்த நிலையில், என் உடலை ஒரு மகான் ஏற்றுக் கொண்டு, என்னையும், என்னையும் என்பது, பிரிந்த என் உயிராத்மாவை, அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில், அவ்வுடலில் நான் விட்டுப் பிரிந்த உடலில், அம்மகானினால் அவ்வுடலுக்கு ஈர்க்கப்பட்டு, அம்மகானே என் உயிரையும், எம் உடலையும் வழி நடத்தி, எம்மை, எம்மை என்பது ஈஸ்வரபட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.

பதினாறு வயதில், பழனிக்கு வந்தோம். வந்தோம் என்பதன் பொருள் புரிந்ததா? எம் உடலை ஏற்ற அம்மகானின் செயல் நிலை வெளிப்படும் நிலையிலிருந்து, நான் வேறல்ல, அம்மகான் வேறல்ல என்ற நிலையில், அம்மகானேதான் எல்லாமில் எல்லாமாகச் செயல் கொண்டார்.

மகான் என்பது, ஒளியுடனே ஒளியாக அனைத்திலும் கலந்துள்ள, அவ்வாதவனான சூரிய மகான்தான் இவ்வுடலை ஏற்றுச் செயல் கொண்டார். இனி யான் என்று ஈஸ்வரபட்டரின் எம் நாமத்தை, எனதாக்கிச் செப்பிட யாது உள்ளது? அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல், அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டு விட்டது எம் உயிராத்மாவும்.

மகான்களின் நிலையெல்லாம், பிற உடலை ஏற்றுத்தான், சில நிலைகளை, அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும். இந்த பூமியில், இப்பூமியின் உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே, மகான்களாகச் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.

அவ்வாத்மாக்களின் நிலை பெற்ற மகான்களெல்லாம், அவர்கள் பெற்ற சக்தியை, இவ்வுலகினில் ஒவ்வொரு ரூபத்தில் இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டேதான் உள்ளனர். மற்ற ஜீவாத்மாக்களின் மூலமாகத்தான், அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.

ஈஸ்வரபட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன், பதினாறாவது வயதில், ஈஸ்வரபட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார். அந்நிலையில், அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார், பைத்தியக் கோலம் பூண்டு.

பல அன்பர்களின் இல்லத்தில், வைத்திய முறையை உணர்த்தியும், சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செயல்வித்தும், அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.

அந்நிலையில் அவர்களுக்கும், பல ஆசை நிலைகளை ஊட்டி, இவ்வுலக மக்களின் பேராசையான, தங்கம் என்ற உலோகத்தைச் செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாக உணர்த்தி, அவர்களின் ஆத்மா, இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு, அல்லல்படுவதையும் உணர்த்திட்டேன்.

எம்மை ஒரு கருவியாக்கி, எம் சக்தியில் உள்ள பொருள் சக்தியைத்தான், அவ்வாத்மாக்கள் விரும்பினார்களே தவிர, அழியாப் பொருளான ஆத்ம செல்வத்தை யாரும் அங்கு விரும்பவில்லை.

பல் இல்லங்களில், ஈஸ்வரபட்டரின் உடல் கொண்டு, பல வியாதிகளைக் குணப்படுத்தி, ஞானதைப் போதிக்க முயன்றோம். எம்மிடம் உள்ள வித்தை என்ன? அதனால் பெறப் போகும் பயன் என்ன? பயன் என்பதையே, அழியப்போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா!

அந்நிலையில்தான், வேணுகோபால நாயக்கனையும் பிடித்தேன். அவனது முன் ஜென்மத்தில், பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான். அஜ்ஜென்ம ஆசையிலிருந்து விடுபடாமல், வேணுகோபால பிம்ப உடல் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான். அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே, பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.

மற்ற ஆத்மாக்களாக இருந்தால், இன்றைய இக்கலியில் மீளுவது கடினம். பல இன்னல்களையும் தந்துதான், அவனை ஞானத்தில் வழித்தொடரை அறிய வைத்தேன். பல காலமாக இந்த இன்னலில் இருந்த பிறகுதான், அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன். பல ஆசை நிலைகளையும், ஊட்டிவிட்டேன்.

இவ்வாத்மாவையும் முடித்துக் கொள்ளலாம் என்னும், சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன். பல ஊர்களுக்கு அலையவிட்டு, ஒவ்வொரு ஆத்மாக்களின் எண்ணநிலை, ஆசைநிலை அனைத்தையும் அறியச் செய்து, அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கி, பல சக்திகளை வெளிப்படுத்தி, பல ஆன்மாக்களுக்கு ஞான வழித்தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.

அந்நிலையில்தான் எமக்கு சிஷ்யனாக்கி, அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம் என்பதனை உணர்ந்து, ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலே விட்டுப் பிரிந்தேன். அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது. ஈஸ்வரப்பட்டரின் உடலிலிருந்து பிரிந்து, வேணுகோபாலின் மூலமாக இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தி வந்தேன்.

எம்மைப் போலுள்ளவர்களின் நிலையெல்லாம், இவ்வாத்மாக்கள் எங்கெங்குள்ளனவோ, அங்கெல்லாம் ஒவ்வொரு ரூபத்தில் மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க, பல செயல்களைச் செய்விக்கின்றோம். 
 
ஞானகுரு - ஈஸ்வரபட்டரைப் பற்றி வெளிப்படுத்திய பேருண்மைகள்
நமது குருநாதர், எமது குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள் கொண்டு, அவர் பல கோடி ஆண்டுகளுக்கு முன், அவருடைய உயிராத்மா, விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இணைந்தவர்.

அதன்வழி, நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு, மற்ற உயிர்களிலே அது விளைந்து, பலவாறு பல உணர்வின் தன்மையை, இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு, அந்தந்த உணர்வுகள் பட்டு, அந்தந்த உடல்கள், அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி, அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக இதைப் போன்று, எத்தனையோ ரிஷிகள் சேர்ந்து, அந்த நிலைகள் கொண்டு அவர்கள் சென்றுள்ளார்கள்.

ஆக, எமது குருநாதர், நமது குருநாதர், ஏனென்றால், எமது என்று, யாம் தனித்துச் சொல்வதற்குப் பதில், நமது என்ற நிலைக்கே, அந்த நிலைக்கு அவர் எம்மை, அந்த உணர்வின் தன்மை கொண்டுதான் உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால், அவருடைய உணர்வுகள் இன்று, அந்த சப்தரிஷி மண்டலங்களாக இருப்பதினாலே, அந்த உணர்வின் தொடர் கொண்டு, ஏனென்றால், அவருடைய உணர்வலைகள்தான், இங்கே பலவாறாக, பரவலாகப் படரப்பட்டு, பல உயிராத்மாக்கள் விண் சென்றுள்ளார்கள்.

நமது குருநாதருடய உணர்வலைகள், இங்கே ஒவ்வொரு உணர்வுகளிலேயும் படரப்பட்டு, நம் உயிராத்மாவை ஒளியாக மாற்றி, ஒளியின் சரீரமாகப் பெரும்மண்டலமாக, சப்தரிஷி மண்டலமாக, சப்தரிஷி மண்டலம் என்று, அது சுழன்று கொண்டிருக்கின்றது. அந்த மண்டலத்திலே, நாம் எல்லோரும் இணையலாம்.