ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2024

“தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்” பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்...” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான். குரு என்றால் என்னப்பா...?

குரு என்றாலே “ஒளி நிலை...” என்பது பொருள்...!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி... உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானு கோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்...!” என்ற நிலை இல்லையப்பா...!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்...! என்ற சொல்லும் எதற்கப்பா...?

“தனித்துவமான சக்தி...” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்... மாமகரிஷிகளின் ஆசியுடன்... “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை...” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது...?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்... சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்... கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே...?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்...! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே...?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்...? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

மூதாதையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று “ஒரு நாளைக்கு ஆயிரம் முறை எண்ணுங்கள்”

இந்திய மண்ணிலே தோன்றிய ஞானிகளால் வளர்க்கப்பட்ட ஆன்மீகத்தின் நிலைகளை எவரும் பழித்திடும் நிலை வராது… வரக்கூடாது என்பதை குருநாதர் அன்றே சொன்னார். அவர் காட்டிய வழியினைத்தான் நானும் (ஞானகுரு) இப்பொழுது சொல்கின்றேன்.

விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் மூதாதையர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும்…
1.ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது
2.எங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
3.பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் அவர்களை உந்தித் தள்ளுங்கள்… அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள்ளும் சேரும்.
5.அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…
6.தீமைகளை விளைய வைக்கும் “தீய உணர்வுகள் அகல வேண்டும்” என்ற உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

தத்துவ ஞானிகள் வளர்ந்து தீமைகளை அகற்றிய நாடு இது. முதல் நிலையாக உலகெங்கிற்கும் மெய் ஞானத்தை உணர்த்திய பூமி இது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நிலைகளை இங்கிருந்து தான் உலகிற்குத் தெளிவுற எடுத்துரைத்தது.
1.விண்ணுலகின் ஆற்றலை ஒளியின் சரீரமாகச் சிவமாக்கியவன் அகஸ்தியன்.
2.எந்த நாட்டவரும் அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெற முடியும்.

சீவலிங்கமாக இன்று இருக்கின்றோம். அகஸ்தியன் உணர்வை எடுத்து அதனின் துணை கொண்டு “உயிருடன் ஒன்றிய இராமலிங்கமாக” எண்ணத்தின் வழிகளிலே எண்ணத்தால் உருவாக்கப்பட்ட தன்மை கொண்டு… என்றும் ஒளிச் சரீரமாக இருக்க முடியும்.

இந்த உலகில் தீய சக்திகள் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் யாம் இதை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

தீமைகள் பரவாது தடுக்கச் செயுயும் அந்த ஞானிகள் உணர்வுகள் இங்கே அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும் எல்லோருக்கும் பேரானந்த அமுதாக இது கிடைக்க வேண்டும் என்று தான் குருநாதர் கூறினார்.

அதன் வழியில் தான் நான் இதைச் செயல்படுத்துகின்றேன் சாமி வேகமாகப் பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.

உலகில் நல்லது என்று சிந்தித்துச் செயல்படுத்தும் மக்களை வீழ்த்திடும் நிலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. எளிமையானவர்களிடமிருந்து பொருள்களைத் தட்டிப் பறிக்கும் நிலையே உருவாகிக் கொண்டுள்ளது

வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் (அங்கிருந்து) ஆணையிடுவதை சிரம் மேல் ஏற்று நடப்பவர்கள் அசுர உணர்வு கொண்டோர் இங்கே நம் நாட்டிலும் உண்டு. அதிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ண வேண்டும்.

சாஸ்திரப் பிரகாரம் நரசிம்ம அவதாரமாக தீமைகளை அகற்றிய அந்த மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து… உயிருடன் ஒன்றி… விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்ற வேட்கையைக் கூட்டி ஒருங்கிணைந்து செயல்பட்டு தீமைகளை அகற்றுங்கள்.

அதே போன்று
1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தும் உணர்வுகளை அடிக்கடி கூட்டிக் கொண்டே வாருங்கள்.
2.அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்
3.அவர்கள் முன் சென்றால்… அடுத்து நாமும் நிச்சயம் பிறவா நிலை பெற முடியும்.