ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2012

உயிரே கடவுள்



சாமி புத்தகம் - உயிரே கடவுள் 
“உயிரே கடவுள்” (விளக்கம்) - ஆதிசக்தியும் பரப்பிரம்மமும்
(பக்கம் 9-13)

ஆதியில் ஆவியாக இருந்த ஆற்றல்கள் ஆதிசக்தி.
அந்த ஆற்றல்கள் மேகங்களாக மாறி,
மேகங்கள் தூசிகளாக மாறி,
தூசுகள் ஈர்ப்புக்காந்த நுண் அணுக்களாக மாறி,
ஈர்ப்புக்காந்த நுண் அணுக்கள் அதனதன் ஈர்ப்பில்,
பற்பல குணங்கள் கொண்ட ஆற்றல்களைச் சேர்த்துக் கொண்டு,
பற்பல குணங்களின் உணர்வலைகளாக மாறி,
ஒன்றுடன் ஒன்று கலந்ததால் நீராக மாறி,
நீர் ஆவியாக மாறி,
இவ்வாறே ஒன்றுடன் ஒன்று கலந்ததால், வெப்பமாகும் காந்த நுண் அணுக்களும்,
ஒன்றுடன் ஒன்று கலந்ததால் அமிலமாகக் கரைக்கும் அணுக்களும்,
ஈர்க்கும் காந்த அணுக்களும்,
பொறிகளை உருவாக்கும் உணர்வலைகளும்,
கண்களுக்குப் புலப்படாத நிலையில், அணுக்களாக, அலை அலைகளாக, பேரண்டத்தில் உருப்பெற்றுப் பரவிய பேராற்றல்கள், பற்பல குணங்களின் நுண் அணுக்களாக உருப்பெறச் செய்யக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகளே, “பரப்பிரம்மம்”.

பற்பல உணர்வலைகள் குவிந்து, ஒன்று சேர்ந்து, ஒரு பொருளாக உருப்பெறச் செய்யும் நிகழ்ச்சி, “பிரம்மம்”.
உருப்பெற்ற பொருள் “சிவம்”.
தன் எடையின் கனத்தால், பேரண்டத்தில் நகர்ந்து சுழலச் செய்யும் ஆற்றல் “சக்தி”.

இவ்வாறு, சிவசக்தியாக இயங்கி, சுழலும் பொழுது வெப்பமாகி,
வெப்ப அலைகள் பொருளுக்குள் இருக்கும் உணர்வலைகளில்,
அணுக்களை வெப்பமாக்கி,
உணர்வலைகளை இயங்கச் செய்யும் ஆற்றலே கடவுள்.

பேரண்டத்தில், ஒரு சிறு பொருளாக உருப் பெற்று, அந்தப் பொருள் சிவசக்தியாகச் சுழன்று, இயங்கிக் கொண்டு, பேரண்டத்தில் உள்ள பற்பல குணங்களின் உணர்வலைகள், காந்த அணுக்கள், பொறிகளை எழுப்பும் அணுக்கள், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தால் அமிலமாக்கும் அணுக்கள், தூசுக்கள், துகள்களையும் தனக்குள் எடுத்துக் கொண்டு வளரும் நிலை பெற்றது.

மேற்கூறியவாறு, பல கோடிக் கோடி ஆண்டுகள் வளர்ந்து, கோளாகி, நட்சத்திரமாகி, சூரியனாக முழுமை பெற்று, சூரியன் தனக்குள் வளர்ச்சி பெற்ற,
பேராற்றல் மிக்க கதிரியக்க ஆற்றல்களையும்,
வெப்ப அணுக்களையும், உயிரணுக்களையும்,
பற்பல தாது வர்க்கச் சத்துக்களையும், காந்த அணுக்களையும்
தூசுகளையும்., கடும் விஷத் துகள்களையும்,
பெரும் புயலாகப் பரவெளியில் உமிழ்ந்து,
பரவெளியில் பரவச் செய்கின்றது.

சூரியன் பரவெளியில் உமிழ்ந்ததில், சிறு பொருளாகி, அதன் வளர்ச்சியில் கோள்களாகி, கோள்கள் தன் வளர்ச்சியில் நட்சத்திரங்களாகின்றன. வளர்ந்து வரும் கோள்களும், சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில், சூரியனை வலம் வந்து கொண்டும், சூரியனின் அணைப்பில், வாழ்ந்து வளர்ந்து கொண்டும் இருக்கின்றன.

சூரியனின் “ஈர்ப்பு வட்டம்”, ஓர் பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியனை வலம் வரும் கோள்களும், நட்சத்திரங்களும், சந்திரனும் சேர்ந்து, ஓர் சூரியக் குடும்பமாகின்றது.

பிரபஞ்சத்திற்குள் இருக்கும் கோள்கள், சந்திரன், நட்சத்திரங்கள், உயிரணுக்கள், இவைகள் அனைத்தையும் சூரியன் தன் ஆற்றல்களால் பிரகாசிக்கச் செய்கின்றது. மேற்கூறியவாறு, பிரபஞ்சத்திற்குள் இருக்கும் அனைத்திற்கும்
உயிராக இருந்து, இயக்கும் சூரியனை, சர்வேஸ்வரா என்றும்,
இயங்கும் பொழுது ஏற்படும் சக்தி, சர்வேஸ்வரி என்றும், மகரிஷிகள் அழைக்கலாயினர்.

பிரபஞ்சத்தில் சூரியனை வலம் வரும் பூமி, பிரபஞ்சத்தில் மிதந்து, சுழன்று கொண்டிருக்கும் நிலையில், பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கும் உயிரணுக்களையும், பற்பல உணர்வுகளின் சத்துக்களையும், தனக்குள் ஈர்த்து எடுத்துக் கொண்டு, தானும் வளர்ந்து கொண்டு, தனக்குள் தாவர இனங்களை வளரச் செய்கின்றது. தாவர இனங்கள், தனக்குள் வளர்த்துக் கொண்ட சத்துக்களைப் பூமியில் பரவச் செய்கின்றன.

இதைப் போன்றே, பூமியில் விளைந்த சர்வ சத்துக்களும், தனக்குள் வளர்த்துக் கொண்ட சத்துக்களை, பூமியில் பரவச் செய்கின்றன. பிரபஞ்சத்திலிருந்து, ஈர்த்து எடுத்துக் கொண்ட வெப்ப அலைகளும், மற்றும் பற்பல உணர்வலைகளும், பூமியில் பரவிப் படர்ந்திருக்கின்றன.

பூமி பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்துக் கொண்ட அணுக்கள் பூமியில் பரவியுள்ள தாவர இனங்களின் சத்துக்களையும், பற்பல உணர்வலைகளின் சத்துக்களையும் ஈர்த்து, உடல் கொண்டு வளர்கின்றன. அதாவது, கிருமியாக, புழுவாக, பறவையாக, மிருகமாக, இவ்வாறு மனிதன் வரை வளர்ச்சி பெற்று, வளர்ந்து கொண்டும், வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.

பூமி பிரபஞ்சத்தில் ஓர் பரமாக இருப்பதால், பரமேஸ்வரா என்றும்,
பூமியில் அனைத்து பொருள்களையும்
இயங்கச் செய்து கொண்டிருக்கும் சக்தியை, பரமேஸ்வரி என்றும், மகரிஷிகள் அழைக்கலாயினர்.

பூமிக்குள், காற்றுடன் கலந்திருக்கும் சர்வ உணர்வலைகளும், சத்துக்களும், பூமிக்கு ஆத்மாவாக இருக்கின்றது. அதாவது பூமி ஓர் பரம், பரத்துக்கு ஆத்மா பரமாத்மாவாக இருக்கின்றது.

பூமிக்குள் இருக்கும் அனைத்துப் பொருள்களும், தாவர இனங்களும், உயிரினங்களும் பரமாத்மாவிலிருந்தே, சத்துக்களை ஈர்த்து, வளர்த்து வாழுகின்றன.

இதைப் போன்றே, உயிரினங்கள் இறந்தாலும், உயிராத்மாக்கள் பரமாத்மாவில் கலக்கின்றன. தாவர இனங்களின் சத்துக்களும், பரமாத்மாவில் கலக்கின்றன.

சூரியனில், கோள்களில், நட்சத்திரங்களில் விளைந்த பேராற்றல்கள் பிரபஞ்சத்தில் பரவி வருவதில், சூரியனில் விளைந்த உயிரணுவாக உருப்பெறச் செய்யவல்ல நுண்ணணுவும், கார்த்திகை நட்சத்திரத்தில் விளைந்த கதிரியக்க நுண்ணணுவும், வியாழன் கோளில் விளைந்த சத்தும், செவ்வாய்க் கோளில் விளைந்த சத்தும், சந்தர்ப்பவசத்தால், இந்த நான்கும் ஒன்று சேர்ந்தால், ஓர் கருவாகி, துடிப்புள்ள உயிரணுவாகின்றது.

இவ்வாறே, சூரியனில் விளைந்த உயிரணுவாக உருப்பெறச் செய்யவல்ல நுண்ணணுவும், ஒவ்வொரு நட்சத்திரத்தில் விளைந்த கதிரியக்க நுண்ணணுவும், வியாழன் கோளில் விளைந்த சத்தும், ஒவ்வொரு கோளில் விளைந்த சத்தும், சந்தர்ப்பவசத்தால், இந்த நான்கு ஆற்றல்களும் ஒன்று சேர்ந்தால், ஓர் கருவாகி, துடிப்புள்ள உயிரணுவாகின்றது.

அதாவது, உயிரணுக்குள் வெப்பம் இருந்து கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பவசத்தால், தாவர இனச் சத்துக்களில் இத்தகைய உயிரணு வீழ்ந்தால்,
அந்தத் தாவர இனச் சத்தை, உயிரணு ஈர்த்து,
உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பம்,
தாவர இனத்தின் சத்திற்குள் மறைந்திருக்கும்,
வெப்ப அணுக்களை இயக்கி,
புழுவாக உருப்பெறச் செய்கின்றது.

அதாவது, உயிரணுவின் துடிப்பினால்,
உயிரணுவிற்குள் ஏற்படும் வெப்பம்
புழுவின் உடலுக்குள் மறைந்திருக்கும் வெப்ப அணுக்களை, இயக்கி,
உடலை வாழ, வளரச் செய்யும்,
(உயிரணுவிற்குள்) வெப்பமாக இருந்து,
உயிராக இயங்கும், உயிரே கடவுள்.

புழுவாகி, உடல் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் புழு உட்கொண்ட இரையும், சுவாசித்த உணர்வுகளும், உடலில் நுண் அணுக்களாக விளைந்து, விளைந்த நுண் அணுக்கள், புழுவின் உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாகச் சேர்ந்து, உயிராத்மாவாகி, புழு இறந்தபின், புழுவின் உயிராத்மா பரமாத்மாவில் கலக்கின்றது. பரமாத்மாவில் கலந்துள்ள, புழுவின் உயிரான்மா, மறு பிறவியில் பூச்சியாகப் பிறக்கின்றது.

இவ்வாறு ஒவ்வொரு உடலிலும், உட்கொண்ட உணவுகளுக்கும், பற்பல குணங்களின் உணர்வுகளுக்கொப்ப, பல்லியாக, பாம்பாக, பறவையாக, மிருகமாக, இவ்வாறு மனிதன் வரை உருப்பெறச் செய்த
“உயிரே கடவுள்”. எண்ணும் எண்ணமே இறைவன்.
உணர்வுகளின் செயல்களே தெய்வங்கள்.


(பக்கம் 30-32)

பழனியிலே, யாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, குருநாதர் எம்மை ஆட்கொண்ட ஆரம்பக் காலங்களில், பல உண்மைகளை நேரடியாகவே அனுபப்வபூர்வமாகவே உணர்த்தி வந்தார்.

குருநாதர், எம்மை அழைப்பதற்காக, வீட்டின் அருகில் உள்ள மின் கம்பத்தைத் தட்டுவார். அவ்வாறு, அவர் தட்டும் சத்தம் கேட்டு, யாம் வெளியில் வந்தோம்.
பரிபாஷையில் போகலாமா? என்றார்,
சரி என்றோம்.

ஒவ்வொரு தெருவிற்கும், நடத்தியே கூட்டிச் சென்றார். அப்பொழுது, ஒரு சில வீட்டிற்கு முன் நின்று, பரிபாஷையில் சுட்டிக் காட்டி, கவனித்துப் பார்த்துக்கொள்” என்று சொல்லிக் கொண்டே, பல தெருக்கள் வழியே செல்லும் பொழுது, சில வீடுகளைச் சுட்டிக் காட்டி வந்தார்.

பின்பு, சண்முகநதிக்கு இருவரும் சென்றோம். அங்கு ஆள் நடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தோம். அப்பொழுது, அவர் சுட்டிக் காட்டிய, ஒவ்வொரு வீட்டிலுள்ளவர் பெயரைச் சொல்லி, இன்னார் இன்னாரெல்லாம் என்னிடம் வித்தைகள் கற்றுக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டு, எனக்கே பல ஆசைகளைக் காட்டி, பல ஆசை வார்த்தைகளைச் சொல்லி, வித்தையைக் கற்றுக் கொள்ள விரும்பியவர்கள்.

சிலர், மருந்துகளின் மூலத்தைக் கற்றுக் கொடுத்தால், வேண்டிய வசதி வாய்ப்புகளுடன் கட்டிடங்கள் கட்டித் தருகின்றோம், நீங்கள் அங்கேயே தங்கிவிடலாம் என்றனர்.

நான் அரைப் பைத்தியமாய் நடித்தபொழுது, சில குடும்பங்களில் கடும் நோய்வாய்ப்பட்டு வேதனை கொண்டிருக்கும் ஒருவருக்கு மருந்து கொடுத்த பொழுது, உபச்சாரமும், விருந்தும், வரவேற்பும், புகழாரமும் இருக்கும். ஆனால், நோய் தீர்ந்தபின், ஒரு தடவை சும்மா போனால், முகம் சுளிப்பார்கள். மறுமுறை சென்றால், “பைத்தியம் வந்துவிட்டது தொல்லைக் கொடுக்க” என்று சொல்லிவிட்டு வீட்டில் குழந்தைகள் இருந்தாலும், கதவை மூடிவிட்டு சிறிது நேரம் வெளியில் சென்றுவிட்டு, வீடு திரும்புவார்கள்.

சிலர் என்னைப் பார்த்தவுடன், “பைத்தியம் வந்துவிட்டது” என்று கதவை மூடி விடுவார்கள். இவ்வாறு, தெருவில் சுட்டிக் காட்டியவர்களின் பெயர்களைச் சொல்லி வந்ததோடு, மனிதனின் குணங்களையும், எனக்குப் புரிய வைத்தார்.

அச்சமயம், நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்தில், எறும்புப் புற்று இருந்தது, அதை முதலில் நான் கவனிக்கவில்லை. வெகு நேரம் உட்கார்ந்து இருந்ததால், கால்கள் மரத்துவிட்டன. அதனால் கால்களை நீட்டிச் சரி செய்தேன்.

அச்சமயம், என் கால்கள் எறும்புப் புற்றின் மீது பட, எறும்புகள் சாரி சாரியாக என் கால்களில் ஏறிக் கடிக்கத் தொடங்கின. எறும்புகளை என் கையால் தேய்த்துவிட, சில எறும்புகள் இறந்துவிட்டன.
இதைப் பார்த்துவிட்ட குருநாதர்,
அந்த எறும்புகளின் உயிர், என் சுவாசத்தால் ஈர்க்கப்பட்டு,
என் உடலில் சேர்வதை எனக்குக் காட்டி,
எறும்பு கோபத்துடன் கடித்ததும், நீ கோபத்துடன் நசுக்கியதும்,
இரண்டு உணர்வுகளும் ஒன்றாக இருப்பதால், 
நீ உடலுடன் இருப்பதால்,
எறும்பின் உயிர், உன் உடலில் வந்து சேர்ந்து விட்டது.
இது உன் இரத்தத்தில் கலந்து, இரத்தம் அமிலமாக மாறும் பொழுது, அதனுடன் கலந்து விடுகின்றது, என்றார் குருநாதர்.

அமிலம் விந்தாக மாறி வரும் பொழுது, விந்தில் கலந்துவிடுகின்றது, விந்தில் உன் ஆற்றலின் சக்தி அனைத்தும் இருப்பதால், எறும்பின் உயிரில் எறும்பின் உடல் சத்தின் அனைத்து ஆற்றலும், உயிரின் ஈர்ப்பில், ஆத்மாவாக மொய்த்துக் கொண்டிருக்கும் அணுசிசுக்கள், உன் குழந்தையாகப் பிறக்கப் போகும் அணுசிசுக்களாக வளரப் போகிறது, என்றார் குருநாதர்.

பிறகு எறும்புப் புற்றிலேயே உட்கார வைத்து, கண்களை மூடிக் கொண்டு, என் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொன்னார். அவர் சொன்னபடி இருந்தேன். சிறிது நேரத்தில், எனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை, என்னால் உணர முடிந்தது.

அச்சமயம், புற்றில் இருந்த எறும்புகள் சாரி சாரியாக, என் உடம்பில் மொய்க்க ஆரம்பித்துவிட்டன. எறும்புகள் உடலில் ஊரும் பொழுது,
என் உடலின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது என்றும்,
என்னை எறும்புகள் கடிக்கும் பொழுது,
எவ்வாறு, என் கைகள் என்னை அறியாமல்
எறும்பைத் தேய்த்து நசுக்குகின்றது?
நசுக்கிய எறும்பின் உயிர்கள்
என் சுவாசத்தின் ஈர்ப்பில் எவ்வாறு கலக்கிறது? என்றும் உணரச் செய்தார்.

உடலில் ஊர்ந்து கொண்டிருக்கும், மற்ற எறும்புகள் தன் உணர்வின் ஒலியெழுப்பி, ஒன்றுக்கொன்று புரிந்து செயல்படுவதையும், எனக்கு உணர்த்தினார். இதைப் போன்றே, வேறு சில நிகழ்ச்சிகளைக் காட்சியாகவும், உணர்வுகள் மூலம் உதயம் கொடுத்தும், உணர்த்திக் காட்டினார்.

(பக்கம் 38.39)

சப்தரிஷி மண்டலங்களைக் காண்பித்தல்
உலகில் உள்ள மதங்கள் அனைத்தும், அந்தந்த மதங்கள் காட்டிய வழிமுறைப்படி, வணங்கி வரும் தெய்வ வழிபாட்டில், உபதேசித்த அறநெறிகளையும், பல நற்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து வரும் மனிதர்கள், ஒவ்வொரு மனிதனும் தான் வணங்கி வரும் தெய்வங்கள், தங்களைக் காத்து வரும் என்ற நம்பிக்கையில், எல்லா வழிகளிலும் நல்லதைச் செய்யவே, உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் எண்ணுகின்றார்கள்

ஆனால், நான் உனக்கு காட்சியில் உணர்த்திய படி, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தீய உணர்வலைகள், அவர்களை அறியாமல் அவர்கள் உடல்களில் எவ்வாறு சேர்கின்றன என்பதனையே உனக்கு உணர்த்தினேன், என்றார் குருநாதர். அதிலே நீயும் ஒருவன், 
தீய உணர்வுகளில் இருந்து உன்னை,
நீ எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளப் போகின்றாய்?”
என்ற கேள்விக் குறியுடன் அவர் சொல்வதை நிறுத்திக் கொண்டார். சிறிது நேரம் கழித்து, 
என்னை விண்ணை நோக்கிப் பார்க்கும்படி சொன்னார். 
பல நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும்,
ஒளி அலைகளைக் காண்பித்து,
அதன் நிலைகளையும் உணர்த்தினார்.
பின்பு, சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்புக்குள்,
சிறுசிறு புள்ளிகளாக வலம் வந்து கொண்டு,
கோலிக் குண்டுகளைப் போன்று,
பல வண்ணங்களில் இருந்தன. 
அவை எல்லாம் என்ன?” என்று என்னைக் கேட்டார்.


நான் தெரியவில்லைஎன்று சொல்லியதும், மற்றவர்களிடம் பைத்தியம் பேசுவது போன்று பேசுவதைப் போல, எனக்குப் புரியாத நிலையில் பேசிக் கொண்டே, என்னை ஓங்கி ஒரு அடி கொடுத்தார். நான் திகைத்துப் போனேன், பிறகு அதன் நிலையை உணர வைத்தார்.

அதெல்லாம், சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்திய ஒளி சக்தியை, பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில், அவர்கள் தவங்களின் பலனால், புலன்களின் உணர்வால், அந்த ஒளி சக்தியை தங்களின் சுவாசங்களில் ஈர்த்து, இரத்த நாளங்களில் சேர்த்துக் கொண்டு, அவர்களின் தவத்தின் வலிமையால், சப்தரிஷி மண்டலங்களின் ஒளி சக்திகளின் ஆற்றல்களை, அவர்களின் உடல்களில் சேர்த்துக் கொண்டதினால். மனிதனை மிருகமாக மாற்றவல்ல தீய உணர்வுகளை மாய்த்து,
தங்களையே அறியும் ஞானிகளாக,
ஞானத்தின் வழித் தொடரில் மெய்ஞானிகளாகி,
அவர்களின் உயிரில், ஆத்மாவாக இயங்கிய அணு சிசுக்கள்,
ஒளியாக மாறி, உயிருடன் உயிராகச் சேர்ந்து,
ஒளியின் உணர்வு கொண்ட, ஜடமாக மின்னும்
நட்சத்திரங்களைத் தான் நீ பார்த்தது, என்றார் குருநாதர்.

உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக இருக்கும் அணு சிசுக்கள், ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கு ஒப்ப, அணு சிசுக்கள் மாறிக் கொண்டே இருக்கும், மாறிய அணு சிசுக்களுக்கு ஒப்பத் தான், அடுத்த உடலை அந்த உயிர் உருவாக்கும், என்று உணர்த்தினார் குருநாதர்.

(பக்கம் 39-42)

சிறிது நேரம், மலைகளையும், காடுகளையும், சமவெளிகளையும் திரும்பிப் பார்க்கச் சொன்னார். திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பொழுது, இளம் கருப்பு அடர்த்திக்கொப்ப
இலேசான ஒளி,
பிரகாசமான ஒளி, இவ்வாறு பல வகையான வண்ணங்களில் சிறு புள்ளிகளாகத் தெரிந்தன.

அதன் விவரங்களை விளக்கி உபதேசித்துக் கொண்டிருந்தார் குருநாதர். “மின்னல் பாயும் பொழுது, கண்களை மூடிவிடாதே!” என்றார்.

எனக்குப் பயம் வந்துவிட்டது. கண்களை மூடவில்லையென்றால், பார்வை இழந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டேன்?. அவ்வளவுதான், பைத்தியம் பிடித்தவர் போன்று, எனக்குப் புரியாத பாஷையில் பேசிவிட்டு, பிறகு என் உணர்வுகளில் புரியும்படி உணர்த்தினார்

நான் சொன்னதைச் செய்கிறேன் என்றாய், இப்பொழுது ஏன் தயக்கம்? என்று கேட்டுவிட்டு, “நீயாகவா பார்க்கிறாய்? நான் அல்லவா பார்க்கச் சொல்லுகிறேன்” என்றார்.

சிறிது நேரம், சமவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது, இந்த மனிதர்களின் உடல்களிலிருந்து, பிரிந்து வந்த உயிராத்மாக்கள்தான், சிறு சிறு புள்ளிகளாகத் தெரிவது, என்று சொல்லி, அதில் பிரகாசமாகத் தெரிந்த புள்ளிகளைச் சுட்டிக் காட்டி, சில கூடுவிட்டுக் கூடு பாய்ந்து, பல செயல்களைச் செய்து வந்து, கடைசியில், கூடுவிட்டுக் கூடு பாயும் சக்தி இழந்த உயிராத்மாக்கள்,
கரும் புள்ளிகளாக இருக்கின்றன என்றார்.
பல மந்திர தந்திரங்களைச் செய்து காட்டி, வந்த உயிராத்மாக்களும்,
கரும் புள்ளியாக இருக்கின்றன.
இவை அனைத்திலும், உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக உள்ள அணுசிசுக்கள் தெரிகின்றன.

இன்னும் சிலர் ஒன்றையும் எதிர்பார்ப்பில்லாது, பல துன்பங்கள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு, நல்ல செயல்களைச் செய்து வந்து, தெய்வமே துணை என்ற நிலையிலும், வளர்ந்து வந்த உயிராத்மாக்கள்
இளம் சிவப்புப் புள்ளியாகத் தெரிந்தன,
என்று சொல்லிவிட்டு, சமவெளியைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொன்னார்.

அச்சமயம், எதிர்பாராது, பளீர் பளீர் என்று, மின்னல் பாய்ந்து கொண்டேயிருந்தது, அந்த மின்னலில் சிக்கிய, பல வண்ணம் கொண்ட உயிராத்மாக்களின் அணுசிசுக்கள் செயல் இழந்து விட்டன. ஆனால், உயிர்கள் அழிவதில்லை.

ஒளியாக இருந்த உயிராத்மாக்கள், மின்னலின் கதிர்வீச்சில் சிக்கினாலும், எவ்விதப் பாதிப்புமில்லாது மின்னிக் கொண்டேயிருந்தன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்கள் மறு பிறப்பிற்கு வராமல், பூமியின் ஈர்ப்பில் சுழன்று கொண்டே, தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவைகளாகின்றன. காலத்தால், விண்ணைச் சென்றடைந்து விடுகின்றன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்களிலிருந்து வெளிப்படும் ஒளி அணுக்கள் சந்தர்ப்பவசத்தால், பிறிதொரு மனிதனின் உணர்வின் ஈர்ப்பில் சேர்ந்தால், அந்த மனிதனின் ஆற்றல் பெருகி, ஞானத்தின் வழித்தொடரில், தன்னை அறியக்கூடிய மெய்ஞானியாகின்றான். இவ்வாறு நிகழ்வது, எங்கோ ஒருவருக்குத்தான் என்று உணர்த்திவிட்டு, மின்னலில் செயலிழந்த உயிராத்மாக்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

மின்னலின் தாக்குதலுக்குள்ளான
உயிராத்மாவின் அணுசிசுக்களின் செயலிழந்த சத்துக்கள்
உயிரில் இணைந்த ஆத்மாவாக இருக்கின்றன.
அது மீண்டும், மனிதனாக உடல் பெறத் தகுதியற்றதாகிறது.

இத்தகைய உயிராத்மாக்கள், பூமியில் உள்ள தாவரங்கள் மீது படும் பொழுது, உயிரின் துடிப்பினால் செயலிழந்த ஆத்மாக்கள், மீண்டும் அணுக்கருக்களாக உருவாகி, புதுவிதமான பூச்சிகளாக உருப்பெறுகின்றது என்பதை உணர்த்தினார்.

(பக்கம் 53-56)
ஒரு சமயம், நானும் குருதேவரும், ஐவர் மலையில் இருக்கும் பொழுது, இரவு பத்து மணிவரை உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் என்னைப் படுத்துத் தூங்கச் சொல்லிவிட்டு, அவரும் படுத்துக் கொண்டார்.

விடியற்காலை நான்கு மணியளவில், நாங்கள் படுத்து இருந்த இடத்திலிருந்து, சிறிது தூரம் தள்ளி மலை உச்சியிலிருந்து குருதேவர் சப்தம் கேட்டது. “என்னைக் காப்பாற்று”, இப்படி, இரண்டு மூன்று தடவை சத்தம் வருவதைக் கேட்டு, விழித்துப் பார்த்தேன்.

குருதேவர், என் பக்கம் படுக்கையில் இல்லை. அவர் சப்தம் போடுவதைக் கேட்டுக் கொண்டே, அவர் இருக்குமிடத்தை அடைந்தேன். நிலா வெளிச்சம் இருந்தது. அவர் இருக்கும் இடத்தைப் பார்த்தால், வழுக்கலான இடம், எந்தப் பிடிமானமும் இல்லை.

“என்னைக் காப்பாற்று” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். என் வேஷ்டியைக் கழட்டி, முறுக்கி, குருதேவரைப் பிடித்துக் கொள்ளும்படிச் சொல்லி, நான் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு, வேஷ்டியைப் போட்டேன்.

அவருக்கு எட்டவில்லை. சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, என் காலில் ஒரு பக்கம், வேஷ்டியைக் கட்டிக் கொண்டு, பாறையில் நான் படுத்துக் கொண்டு, அவர் இருக்கும் பக்கம் சறுக்கிக் கொண்டு, ஒரு பக்க முனை வேஷ்டியைப் பிடிக்கச் செய்ய, முயற்சி செய்தேன்.

ஆனால், அவர் இருக்கும் பக்கம் போகாமல், அதற்கு மாறாக, வேறு பக்கம் என்னை வழுக்கிக் கொண்டு போய், நான் கீழே விழுந்து விடும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த குருதேவர், “என்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்ன நீ, எங்கேயோ போகிறாய்” என்று சொல்லி, பலமாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். சிறிது நேரத்தில்,
“வித்தையைக் காட்டுகிறேன் பார்,
அதைக் கற்றுக் கொள் என்றார்”

நானோ, மரணப் போராட்டத்தில், சிறுகச் சிறுக வழுக்கிக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறேன். பாறைகள் என் உடலில் உரசியதால், இரத்தம் வெளிப்பட்டு, வழுக்கல் அதிகமாகிவிட்டது. குருதேவரோ, “நான் சொல்வதைக் கேள், வித்தைகளைக் கற்றுக் கொள்” என்றார். நானோ, இன்னும் சிறிது நேரத்தில், மலையடிவாரத்தில் போய், வித்தைகளைக் கற்றுக் கொள்கிறேன் என்று, மனம் தளர்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அச்சமயம், குருதேவர் பல அற்புத உபதேசங்களை உபதேசித்தார். ஆனால், அவர் சொல்வதைக் கவனித்துக் கேட்க, என்னால் முடியவில்லை. நான் கீழே விழுந்து இறந்துவிடுவேன் என்ற உணர்வே இருந்தது. அவர் சொல்வதைக் கேட்கக்கூட முடியவில்லை.

இந்த நிலையில், பலமாகச் சிரித்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்று கொண்டு, என்னருகில் வந்து, கைகொடுத்துத் தூக்கி நிறுத்தி, என்னை அழைத்துச் சென்று, சமமான இடத்தில் அமரச் செய்தார்.

பின்னர், சிவ நடனம் போன்று, மிக அற்புதமாக ஆடத் தொடங்கிவிட்டார். பின்பு, அமைதி கொண்டு, பல உபதேசங்களைக் கூறினார். பின்பு, வானை நோக்கிப் பார்க்கும்படிச் சொன்னார். அப்பொழுது, வானில், அணுக்களின் நிலைகளைக் காட்சியாகவும், உணர்வாலும், உணர்த்திக் கொண்டிருந்தார்.

அதற்குள் விடிந்துவிட்டது.
சூரியனின் கதிர் வீச்சால், அணுக்களின் துடிப்பையும், அசைவையும் காட்டி,
பல அணுக்களின் ஆற்றலின் சக்திகள், ஒன்றுடன் ஒன்று கலந்து
ஓர் புதிய அணு உருப்பெறுவதை உணர்த்தி,
இவ்வாறு, பல ஆற்றலின் அணுச்சக்திகளின் கலப்பில்,
ஒன்று சேர்ந்து, ஒரு பொருள் உருப்பெறும் நிகழ்ச்சிதான் “பிரம்மா”
என்று உணர்த்திவிட்டு, இதைத் தான் முன்னோர்கள் பிரம்மா உருவாக்குகின்றான் என்று பெயர் வைத்தனர் என்றார்.

மேலும், ஓர் உயிர் அணுவிலிருந்து எவ்வாறெல்லாம் உடல் அழிந்து, உடலில் சேர்த்துக் கொண்ட வினைகள், உயிரில் ஆத்மாவாகச் சேர்ந்து, சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப மறு ஜென்மத்தில் உடலின் உருவம் எப்படி மாறுபடுகிறதென்று உணர்த்திவிட்டு, பல நிகழ்ச்சிகளைக் காட்சிகளாகக் காண்பித்தார்.

பல உபதேசங்களை, இவ்வாறு காட்சிகளாக எனக்கு உணர்த்திய பிறகு, குருதேவர் உடலைவிட்டு உயிராத்மா வெளியில் வந்து, சூட்சமத்திலிருந்து கொண்டு, பல நிகழ்ச்சிகளைச் செய்து காட்டியது. பின்பு அவர் உடலுக்குள் சென்றுவிட்டது. குருதேவர் எழுந்து உட்கார்ந்து கொண்டு, பல விளக்கங்களை உணர்த்தி உபதேசித்தார்.

(பக்கம் 56-60)

ஒவ்வொரு மனிதனின் உயிரிலும், ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஆற்றல் இயங்கிக் கொண்டுள்ளது. ஆனால், சூரியன் எவ்வாறு கோள்களையும், நட்சத்திரங்களையும், சந்திரனையும், பூமியையும், விண்மீண்களையும், தன் ஈர்ப்பின் அணைப்பில் வளர்த்துக் கொண்டு, தன் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டு ஜீவிக்கின்றதோ, அதைப் போன்று,
ஒவ்வொரு மனிதனின் உயிர், சூரியனாக இருந்து கொண்டு
உயிரில் சேர்ந்துள்ள ஆத்மாவின் உணர்வுகள்,
கோள்களைப் போன்று, மனித உடல்களின் தசைகளாக உருப்பெற்று,
தசைகளில் விளைந்த நுண் அணுக்கள், நட்சத்திரங்களாக உருப்பெற்று,
நுண் அணுக்களின் உணர்வுகள் உயிரின் ஈர்ப்பில் சேர்ந்து,
உயிராத்மாவாக எவ்வாறு இயங்குகின்றது? என்று உணர்த்தினார்.

அதை உணர்த்திக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று என் முன் ஒரு கோர உருவம் தோன்றியது. அதைப் பார்த்ததும், என்னையறியாது பயத்தால், சத்தம் போட்டுக் கத்திவிட்டேன். சிறிது நேரம் பயத்தால், நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது. பின் நடுக்கம் நின்று, நான் அமைதியடைந்தேன்.

மீண்டும் கோர உருவம் தோன்றும், அப்பொழுது, குருநாதர்
“உன் கண்களின் பார்வையின் ஈர்ப்பினால், பய உணர்வுகள்,
உன் உடலில் உள்ள, காந்த ஆற்றல்களில் மோதப்பட்டு,
காற்றில் மிதந்து கொண்டிருக்கும்,
பய உணர்வலைகளை, உன் உடல் ஈர்த்து,
உன் சுவாசத்தால், உயிராத்மாவின் உணர்வில் மோதி,
பய உணர்வுகள் உன் உடலை நடுங்கச் செய்து,
உன்னையறியாது எவ்வாறு சத்தம் போடுகிறாய்? என்பதையும்,

பயத்தால் ஈர்க்கப்பட்ட மூச்சில் கலந்துள்ள, பய உணர்வுகளை,
உன் உடலில் உள்ள இரத்தத்தில் கலந்து,
வடித்துக் கொண்டு, வெறும் காற்றாக
மூச்சு வெளிப்படுகிறது என்பதைப் பார்” என்றார் குருநாதர்.

இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று கோர உருவம் மீண்டும் தெரிந்ததும், பய உணர்வுகள் என் உடலை இயக்கி, எண்ணம் செயல்கள், தன்னிச்சையாக இயங்குவதைத் தெளிவாக உணர்த்தினார்.

இவ்வாறு, மனிதனின் வாழ்க்கையில், ஒவ்வொரு சந்தர்ப்பம்
சுற்றுப்புறச் சூழ்நிலைகளால், உணர்வுகளின் உந்துதலால்,
சுவாசிக்கும் மூச்சில் கலந்து வரும் உணர்வுகளை,
இரத்தத்தில் வடித்து வைத்து, உணர்வுகள் தசைகளாக மாறும் பொழுது,
பயத்தால், கோபத்தால், ஆத்திரத்தால், சோர்வால், குரோதத்தால், வேதனையால் சுவாசித்த உணர்வுகள், இரவில் தசைகளாக மாறும் பொழுது, தசைகளில் எதிர்ப்பு உணர்வுகள் உருப்பெறுவதும், அதனால், உடலில் தசைகளில் வலி உண்டாவதும், நோய்கள் உருப்பெறக் காரணம் ஆகின்றன.

இவ்வாறு, இரத்தத்தில் கலந்துள்ள உணர்வலைகள்
உடலில் உள்ள உறுப்புக்களில் கலந்து, உறைந்து,
வடித்த உணர்வுகள்
எலும்புக்குள் ஊனாக வடித்து, உறைந்துவிடுகின்றன.

அதாவது ஒரு மரம், கொய்யா மரம் என்று வைத்துக் கொள்வோம். எத்தனை வகையான உணர்வின் ஆற்றல்கள் கலந்து வித்தாகி, மண்ணில் பதிந்து, செடியாக முளைத்து, மரமாக வளரும் பொழுது, புவி ஈர்ப்பின் துணையால், காற்றில் மிதந்து கொண்டிருக்கும், தன் உணர்வின் ஆற்றலின் சத்தைத் தனக்குள் ஈர்த்து, உறைய வைத்து, வளர்த்துக் கொண்டு, தான் மூச்சு விடும்போது, கொய்யா மரத்தின் மணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதைப் போன்று,
எலும்புக்குள் ஊனாக உறைந்து,
உணர்வுகள் உயிரின் இயக்கத்தால்,
மரத்தைப் போன்று, தன்னிச்சையாக ஈர்ப்பதும்,
நாம் சுவாசிக்கும்போது, சுவாசத்துடன் கலந்து,
இரத்தத்தில் கலந்து, தசைகளாக மாறி,
தசைகளில் நுண் அணுக்களாக விளைந்து,
விளைந்த நுண் அணுக்கள்,
உயிரின் ஈர்ப்பில் சேர்ந்து, உயிராத்மாவாகி, 48 நாட்களில்,
நுண் அணுக்கள், அணுசிசுக்களாக உருப்பெறுகின்றன.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள், அணுசிசுக்களில் மோதியதும், எண்ணம், சொல், செயல், என்ற உணர்ச்சிகளை உந்தச் செய்து, மனிதனை இயங்கச் செய்கின்றன.

இவ்வாறு, மனித வாழ்க்கையில் உயிராத்மாவில் உருப்பெற்ற அணுசிசுக்கள், மனிதன் இறந்தபின், உடலை விட்டுப் பிரிந்து சென்று, காற்றுடன் (பரமாத்மாவில்) கலந்துவிடுவதும், பிரிந்து சென்ற உயிராத்மாவால்,
எந்த வகை உணர்வின் மணத்துடன், காற்றில் மிதந்து கொண்டிருக்கிறதோ,
அதே வகை உணர்வுகளின் உணர்ச்சியால்,
எதிர்பாராது உந்திச் சுவாசிக்கும் உடல்களில் ஈர்க்கப்பட்டு, அந்த உடலின் இரத்தத்தில் கலந்து, உடலின் இயக்கத்தால், இந்திரியத்தில் கலந்துவிட்ட, உயிராத்மாவின் அணுசிசுக்கள் அந்த உடலின் உருவமாக, உருப்பெறச் செய்யும் அணுசிசுக்களாக வளர்ச்சி பெறுகின்றன.

அதாவது, குளவி தன் உமிழ்நீரால் மண்ணைக் கலக்கி, அதை எடுத்து வந்து கூடுகட்டி, அந்தக் கூட்டில் புழுவை வைத்து, அந்தப் புழுவைக் குளவி கொட்டியதும், குளவியின் விஷமான அமிலம், புழுவின் உயிராத்மாவின் அணுசிசுக்களில் சேர்ந்து, கலந்து, குளவியின் உருவம் பெறுகின்றது.

அதைப் போன்றே, மனித உடலில் வளர்ச்சி பெற்ற உயிராத்மாவின், மணத்திற்கொப்ப, அதே மணத்தின் உடலைக் கொண்ட ஆடோ, மாடோ, மற்ற மிருகமோ, அவைகளின் சந்தர்ப்பவசத்தால், ஏற்படும் உணர்ச்சிகளின் உந்துதலின் சுவாசத்தின் ஈர்ப்பில் சென்று, மறு உடலின் உருவம் அமைகின்றது.
இவ்வாறு, மனித வாழ்க்கையில் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கொப்ப,
உணர்வின் உந்துதலின் சுவாசத்தால், எண்ணமும், செயலும்,
மறு உருவம் பெறுகின்றது என்று,
உணர்வாகவும் காட்சியாகவும் உணர்த்தினார்.

சூரியனில், உயிரணுவாக உருவாகிய உயிர், சூரியனால் இயக்கப்படும் உன் உயிர்,
உயிரின் ஈர்ப்பில் பல பல உணர்வுகள் சேர்ந்து, உடலாகி,
உயிரின் இயக்கத்தால், உடலின் உணர்வுகள் இயங்கி
உணர்வின் ஆற்றலே, எண்ணம் செயல்,
உடலின் இயக்கம் ஆகின்றது.

(பக்கம் 60-62)
உயிரே கடவுள். உன் உடலை ஆள்பவனும், ஆண்டவனாக இருப்பவனும், உன் உயிர்தான். உடலின் இயக்கத்தின் உணர்வில், எழும் எண்ணத்தினால், சுவாசிக்கும் உணர்வே (உன் உயிர்) இறையாகி, உடல் வளர இறைவன் ஆகின்றான்.

உன் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலை, உன் சொல்லின் செயலின் ஆற்றலும், அதாவது, மயில்துத்தத்தைக் (விஷத்தை) கண்களால் பார்க்கின்றாய் என்று வைத்துக்கொள். அதைப் பார்க்கும் பொழுது, அமைதி கொண்டிருக்கின்றது. ஒரு தீங்கும் செய்வதில்லை. அதை நீ சாப்பிட்டால், உன் உடலின் இயக்கமே மாறுபட்டு, குமட்டலும் வாந்தியும் வரச் செய்கின்றது. உடலைச் சோர்வடையச் செய்கின்றது. இறந்துவிடுவோமோ என்று தோன்றுகின்றது.

இதைப் போன்றே, மிளகாயைப் பார்க்க அமைதியாகத் தெரிகின்றது. சாப்பிட்டாலோ, “ஆ” என்று அலறச் செய்கின்றது. காரத்தைத் தணிக்க எண்ணம் தோன்றுகின்றது. நீரைத் தேடிச் சென்று, குடிக்கச் செய்கின்றது.

சுவையான இனிப்பைச் சாப்பிட்டாலோ, மனது மகிழ்ச்சியடைகின்றது. ஆனால், இனிப்பு அதிகமாகிவிட்டாலோ, அதைத் தணிக்க எண்ணம் தோன்றுகின்றது. நீரைத் தேடிச் சென்று குடிக்கச் செய்கின்றது. இதைப் போன்றே, நீ சுவாசிக்கும் உணர்வின் செயலே, தெய்வம் ஆகின்றது. தெய்வச் செயலாக அமைகின்றது.

நீ வாழ்க்கையில் பற்பல குணங்கள் கொண்ட மனிதர்களிடம் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அச்சமயம் எதிர்பாராது, ஒரு முரடனிடம் வாக்குவாதங்கள் முற்றுகின்றது என்று வைத்துக் கொள்வோம். நீ உனக்குள் வலுவை மனதில் வைத்து “உன்னை அழித்துவிடுகிறேன் பார் என்று முரடனைப் பார்த்துச் சொல்கிறாய்”. உன் சொல்லில் வெளிப்படும் உணர்வுகள் முரடனின் செவிகளில் ஒலித்து, அவன் உடலின் உணர்வுகள் உந்தப்பட்டு, உன்னை அழித்துவிடும் எண்ணம், அவனுக்கு அதிகம் உருப்பெறுகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் நீ சுவாசிக்கும் உணர்வுகள், உன் இரத்தத்தில் கலந்து, முரடனை அழித்துவிடும் எண்ணத்தை உணர்த்திக் கொண்டே இருக்கும். முரட்டுத்தனமான உணர்வுகள், உன் உடலில் சேர்ந்து கொண்டு, வினையாக விளைந்து, உன் உடலில் ஆத்மாவாகச் சேர்ந்து, சேர்த்துக் கொண்ட வினைகள், அணுசிசுக்களாக உருப்பெற்று விடுகின்றன.

உன் உடலை விட்டு, உயிர் வெளியே செல்லும் பொழுது, உயிரின் ஈர்ப்பில், வளர்ச்சி பெற்ற உன் உணர்வின் வினைகள், மறு பிறவியில் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் மிருக உருவமாக, உடலைப் பெற்றுவிடும் என்று, உணர்வாகவும் காட்சியாகவும் உணர்த்தினார்.

இதையெல்லாம் அறிந்ததும், என்னையறியாது எனக்குப் பய உணர்வுகள் வந்துகொண்டிருந்தது.
என் சொல்லும் செயலும்,
நன்மை செய்யும் நிலை பெறவேண்டும்.

என் சொல்லும் செயலும்,
பிறருக்குத் தீங்கு செய்யாது காக்க வேண்டுமென்று
குருதேவரிடம் வேண்டினேன்.

அவர் பலமாகச் சிரித்துவிட்டு, “உயிரே கடவுள்அவன் வீற்றிருக்கும் ஆலயம் உன் உடல்.  அதில் அசுத்தம் சேராது காக்க வேண்டியது, உன் கடமை. உன்னையறியாது அசுத்தமாவதைச் சுத்தம் செய்வது, உன் பொறுப்பு என்று கூறினார்.

இந்தப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்து,
வாழ்க்கையில், தன்னுள் சேர்த்த தீய உணர்வுகளை மாய்த்து, மகரிஷிகளாகி,
உயிருடன் உணர்வுகள், ஒளியின் ஒளியாக ஒன்றி,
ஒளியின் உருவமாக ஒளிர்ந்து,
விண்ணில் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டு,
அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றலைக் கொண்டு,
 மகரிஷிகள் வெளிப்படுத்தும் உணர்வின் ஒளி அலைகளை, உனக்குள் சேர்த்து, உன்னையறியாது உன்னில் சேர்ந்த, தீய உணர்வுகளை மாய்த்து, உன் எண்ணம், சொல், செயல், புனிதம் பெறு.

இதுவே உனக்குள் உயிராய் வீற்றிருந்து, உன்னை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனுக்கு, நீ செய்யும் பணியாகும்.
இப்பணியில், ஆண்டவனின் பணியாக,
நீ ஒளி நிலை பெறுவாயாக!
என்று ஆசீர்வதித்தார்
(பக்கம் 69-75)
      குருநாதர், எம்மைத் திருப்பதிக்குப் போகும்படி ஆணையிட்டார். திருப்பதி மலையில், பாபநாசத்தைக் கடந்து, ஏழாவது மைலில், காட்டில் கரடிகள் கூட்டமாக வசிக்கும் இடத்தில், நாற்பத்தெட்டு நாட்கள் தியானத்தில் அமரும்படிச் சொன்னார்.

அவ்வாறு, ஒரு சமயம் தியானத்தில் அமர்ந்திருக்கும் பொழுது, என் எதிரே ஒரு தவளை, தன்னைக் காத்துக் கொள்ளும் நோக்கத்துடன், தத்தித் தத்தி வந்தது. அதை ஆகாரமாய் எடுத்து விழுங்கும் உணர்வுடன், பாம்பு ஒன்று துரத்திக் கொண்டு வந்தது. இதைப் பார்த்தவுடன், என் சிந்தனை மறைந்து, பாம்பின் செயலையும், தவளையின் நிலையையும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, பாம்பின் வாயில், தவளை சிக்கிக் கொண்டது.

தவளை வேதனையுடன் கத்தியது. சிறிது நேரத்தில், பாம்பு தவளையை விழுங்கிவிட்டது. அச்சமயம், பாம்பின் உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் காட்சியாகத் தெரிந்தது. தவளையின் உயிராத்மா பிரிந்து, பாம்பின் கரு உறுப்புக்களின் ஈர்ப்பிற்குள் சென்றடைகின்றது.

தவளையின் தசைகள், பாம்பின் ஆகாரமாக ஆகின்றது. அப்பொழுது, குருநாதர் காட்சி கொடுத்து, பாம்பின் நிலைகளை உணர்த்தினார். அதாவது, பாம்பு விழுங்கிய தவளையின் தசைகள், அமிலமாகக் கரைவது தெரிகிறது. கரைந்த அமிலங்கள், பாம்பின் தசைகளில் கலந்து, தசைகளாக மாறுவது தெரிகின்றது.

குருதேவர் காட்சி கொடுத்து, தியானத்தில் அமரும்படிக் கூறி, பாம்பின் உடலின் இயக்கங்களைத் தியானத்திலிருந்தபடி, விடியும் வரை கவனித்து வரும்படிக் கூறிவிட்டு மறைந்துவிட்டார்.

விடியும் வரை தியானத்தில் அமர்ந்திருந்தேன், விடிந்ததும் குருதேவர் காட்சி கொடுத்தார். அப்பொழுது, குருதேவரிடம் பாம்பின் உடலில், நடந்த நிகழ்ச்ச்சிகளைக் கூறினேன். அதற்கு அவர் விளக்கம் கொடுக்கலானார்.
அதாவது,
“தவளையின் தசைகள், பாம்பின் தசைகளின் சத்தாக மாறி,
பாம்பின் தசைகளில் நுண் அணுக்களாக விளைந்து,
பாம்பின் உயிரின் ஈர்ப்பில், நுண் அணுக்கள் போய்ச் சேர்ந்து,
பாம்பின் உயிராத்மாவாகின்றது” என்றார்.

அதாவது, இன்று விஞ்ஞான அறிவைக் கொண்டு தாவர இனங்களை, ஒட்டு மரங்களாக இணைத்து, ஒன்று சேர்த்து, இரண்டு மரங்களின் சத்துக்களைக் கலக்கச் செய்து, புது வித்துக்களைப் பெறச் செய்கின்றனர் அல்லவா?

அதைப் போன்றே, பாம்பு, தவளையை ஆகாரமாக எடுத்துக் கொண்டதில், தவளையின் தசைகளின் சத்துக்கள் அமிலமாகக் கரைந்து, பாம்பின் தசைகளில் கலந்து, நுண் அணுக்களாக விளைந்து, விளைந்த நுண் அணுக்கள் பாம்பின் உயிரின் ஈர்ப்பில் சேர்ந்து, உயிராத்மாவாகின்றது.

பாம்பு இறந்தபின், பாம்பின் உயிராத்மா காற்றுடன் கலந்து, மணங்கள் கொண்ட ஜடங்களினால் (உடல்களில்) ஈர்க்கப்பட்டு, அதனின் கருக்களில் வளர்ந்து, அதனின் உருவமாக மறு பிறவி எடுக்கின்றது. உதாரணமாக, முதலை போன்ற மறு உருவம் பெறுகின்றது.

தவளையின் உயிராத்மாவைப் பாம்பின் கரு உறுப்புக்கள் ஈர்த்துக் கொண்டதனால், பாம்பின் கருவில் வளர்ச்சி பெற்று, பாம்பின் இனமாக, தவளை மறு ஜென்மம் பெறுகின்றது.

உதாரணமாக, குளவி தன் இனவிருத்தி உணர்வினால், தன் உமிழ்நீரால் மண்னை உருட்டிக் கூடுகட்டி, ஒரு புழுவைத் தூக்கி வந்து, கூட்டில் வைத்து, புழுவைக் கொட்டி, தனக்குள் சேர்த்திருந்த, அமிலத்தைப் புழுவின் உடலில் செலுத்துகின்றது.

புழுவின் உடல் மேல்பாகம் சருகு போல ஆகின்றது.
புழுவின் தசைகள் அமிலமாக மாறுகின்றது.
புழுவின் உயிராத்மா துடிப்புடன் இயங்கி,
கூட்டிற்கு வெளியே இருக்கும்
வெப்ப காந்தங்களை ஈர்த்துக் கொண்டு, இயங்கிய நிலையில்
புழுவின் உயிராத்மா குளவியின் அணுத்திசுக்களாக மாறி,
குளவியின் உருவமாக மறு உரு பெறுவது போன்று,
பாம்பின் கரு உறுப்புக்களில் ஈர்க்கப்பட்ட தவளையின் உயிராத்மா, பாம்பின் கருவில் பாம்பின் அணுத்திசுக்களாக உருப்பெற்று, பாம்பின் உருவமாக மறு உருவம் பெறுகின்றது, என்று உணர்த்திக் காட்சியாகவும் காண்பித்தார் குருதேவர்.

இவ்வாறு, தொடர்ந்து தியானத்தில் இருந்துவிட்டு, மாலை மூன்று மணியளவில் தியானத்தைக் கலைத்துவிட்டு, குருதேவர் காட்டிய பச்சிலைகளையும், கனிகளையும் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் தியானத்தில் அமரலானேன்.

தியானத்தில் அமர்ந்த சிறிது நேரத்தில், மனைவி மக்கள் நினைவும், தன்னிச்சையாகச் செலவு செய்து கொண்டு, நண்பர்களுடன் திரிந்து கொண்டிருந்த நான், குருதேவரிடம் சிக்கிக் கொண்டு, காட்டில் அநாதையாக, சரியான ஆகாரம் இல்லாமல் இப்படியெல்லாம் இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே, என்ற எண்ணங்கள் வந்ததே தவிர, தியானம் இருக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் கண்களைத் திறந்துவிட்டேன். ஆனால், மனது பட படவென்று துடிக்க ஆரம்பித்துவிட்டது. துடிப்பை அமைதிப்படுத்த, எழுந்து நடந்தேன். அச்சமயம், குரங்குகள் கூட்டம் தென்பட்டது. அதை வேடிக்கை பார்த்து, மனதை அமைதிப்படுத்தலாம் என்று எண்ணி, குரங்குகள் கூட்டமாக இருக்கும் இடத்திற்கு அருகில் சென்று, ஓர் மரத்தடியில் அமர்ந்து கொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது, ஒரு முரட்டுக் குரங்கு, குரங்குக் கூட்டங்களை விரட்டிக் கடித்துக் கொண்டிருந்தது. அப்போது, சின்னக் குட்டிகள் ஓடி வந்து, தாய்க் குரங்கைத் தாவிக் கட்டிப்பிடித்துக் கொளவதும், தாய்க்குரங்கு, குட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடுவதைப் பார்த்தவுடன்,
என் மனம் அலைமோதிக்கொண்டு,
என் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும்,
ஏக்கமும், அதிகரித்து மயக்கம் வந்து, மரத்தடியில் அப்படியே சாய்ந்து விட்டேன்.

மயக்க நிலையில், என் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் காட்சியாகத் தெரிகின்றன. என் மூத்த பையன், “லாரிக்கு டயர் வாங்கவும், ரிப்பேர் செலவுக்குப் பணம் வேண்டும், எங்காவது பணம் வாங்கிக் கொடு” என்று என் மனைவியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

பணத்திற்கு நான் எங்கு போவேன்? என்று என் மனைவி சொல்லிக் கொண்டிருக்கும்போது, “பணம் வாங்கித் தருகிறாயா? இல்லையா?” என்று மிரட்டுகிறான் பையன்.

உன் அப்பாவிடம் போய்க் கேள் என்று சொன்னவுடன், வீட்டை அடமானம் வைத்துப் பணம் தருகிறாயா? இல்லையா? என்று மிரட்டுகிறான் பையன்.

அப்பொழுது என் மனைவி, அழுதுகொண்டே, “கையிலிருக்கும் பணத்தையெல்லாம் தொலைத்து, வயலையும் அடமானம் வைத்துத் தொலைத்துவிட்டாய், இனி வீட்டை அடமானம் வைத்து, உனக்குக் கொடுத்துவிட்டு, நாங்கள் எங்காவது விழுந்து சாக வேண்டியதுதான்” என்று சொல்லிச் சத்தம் போட்டு, அழ ஆரம்பித்துவிட்டாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த, 2½ வயது பையனும், பெண் குழந்தைகளும் அழுது கொண்டே, “அப்பா வரட்டும் சொல்லுகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, என் மனைவி கடைசிப் பையனைத் தூக்கிக் கொண்டு “குளம் குட்டையில் விழுந்து சாவோம்” என்று சொல்லிக் கொண்டு, வீட்டை விட்டு வெளியில் செல்கின்றார்கள்.

அச்சமயம், அக்கம் பக்கம் உள்ளவர்கள் என் மனைவியையும், குழந்தைகளையும் தடுத்து நிறுத்தி, என் பெயரைச் சொல்லிப் “பாவிப்பயல் இப்படிச் செய்துவிட்டு எங்கோ போய் விட்டானே” என்று ஏசுகிறார்கள்.

அவ்வாறு, என் உடலில் உந்தப்பட்டு, மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்த உடன், “இது என்ன வாழ்க்கை” என்ற வெறுப்பு மேலோங்கி, தற்கொலை செய்து கொள்ளும் உணர்வுகள் உந்தப்பட்டு, எழுந்து நீர் வீழ்ச்சியை நோக்கி நடக்கலானேன்.

அச்சமயம் மாலை 6.00 மணியிருக்கும், திடீர் என்று குருதேவர் காட்சி கொடுத்து “நான் சொல்வதைச் செய்கிறேன் என்றாய் இப்பொழுது சாகப் போகிறேன் என்று சொல்கிறாய்” என்று சொல்லி சிரிக்கத் தொடங்கிவிட்டார். உடனே என் கலக்கம் தீர்ந்தது. மனம் அமைதி அடைந்தது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தேன். குருதேவர் காட்சி கொடுத்த நிலையிலேயே உபதேசிக்கலானார்.

சூரியன் எவ்வாறு,
தனக்குத் தானே வெப்பத்தை உருவாக்கிக் கொண்டு இயங்குகின்றதோ,
அதைப் போன்று சூரியனில் உதித்த உயிரணு,
சூரியனால் பிரபஞ்சத்தில் வீசப்பட்டு,
சூரியனைப் போன்று தனக்குத் தானே வெப்பத்தை உருவாக்கும்
துடிப்பு நிலை கொண்ட உயிரணுவாய், பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருந்ததை,
பூமியால் ஈர்க்கப்பட்டு, பூமியில் மிதந்து,
தாவர இனங்களில் வீழ்ந்து, தாவர சத்தினை ஈர்த்து,
நுண்ணிய கிருமியாய் உடல் பெற்று,
சில நாட்களில் உடலில் வளர்ச்சிப் பெற்ற நுண்ணணுக்கள்,
உயிரில் ஆத்மாவாகச் சேர்ந்து, கிருமியான உடல் மடிந்து விடுவதும்,
கிருமியின் உடலில் இயங்கும்போது
உயிரில் ஆத்மாவாக சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்து
மறுபிறப்பாக, மறு உடல் புழுவாக உருப்பெற்று உடல் ஜீவிப்பதும்,
இவ்வாறே ஒவ்வொரு உடலிலும், உணவும், உணர்வும், எடுத்துக் கொண்டு
ஜீவித்த நிலைகளுக்கொப்ப,
பூச்சியாக, பாம்பாக, பறவையாக, மிருகமாக, இவ்வாறு பல கோடி ஜென்மங்கள் பிறந்து, இறந்து, மனித உடல் வரை உருவாகியது,
உயிரின் துடிப்பின் ஈர்ப்பு நிலையால்தான் என்பதை முன்பு காட்சியாகக் காண்பித்து உணர்த்தியுள்ளேன் என்று கூறினார்.

“உன் வாழ்க்கையில் குடும்பப் பற்றும், குழந்தைகளின்பால் உனக்கு உள்ள பாசத்தால், உன் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் உந்தப்பட்டு, எவ்வாறு உன் உடலில் செயல்படுகின்றன என்பதை நீ அறிந்து உணரவே, உன் உணர்வுகளை உந்தச் செய்து, உன் குடும்பச் சூழ்நிலைகளைக் காட்சியாகக் காணச் செய்தேன்.

ஆனால், காட்சியாகக் கண்ட நிகழ்ச்சிகளினால்,
உன் உடலின் உணர்வுகள் உந்தப்பட்டு,
நீ சுவாசித்த மூச்சால், சிந்திக்கும் திறன் இழந்து,
உடல் சோர்வடைந்து,
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உருப்பெற்று,
உன் குழந்தைகளின்பால், உள்ள பாசத்தை மறந்து,
உன் உடலையும் மாய்த்துவிடச் செயல்படுத்தியதல்லவா?
உன் சோர்வடைந்த உணர்வுகள் என்றார் குருதேவர்.

இதைப் போன்றே,
சுற்றுப்புறச் சூழ்நிலைகளினால், ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,
புலனறிவால் ஈர்க்கப்பட்ட உணர்வின் சுவாசத்தால்,
உடலில் உள்ள உணர்வுகள் உந்தப்பட்டு
தீய செயல்கள், செயல்படுத்தவல்ல தீய உணர்வுகளை மாய்த்திட,
நான் உனக்கு, “ஆத்ம சுத்தி” செய்துகொள்ளும் ஆற்றல் பெறக் கற்றுக் கொடுத்ததை, நீ முயன்று, ஆத்ம சுத்தி செய்து கொள்ளூம் ஆற்றலை, ஏன் பெறவில்லை? என்று கேட்டுவிட்டு, தியானத்தில் அமர்ந்து, விடிவதற்குள் “ஆத்மசுத்தி செய்து கொள்ளும் உணர்வின் ஆற்றலைப் பெறும்படி” பல நிலைகளை உணர்த்தினார்.

(பக்கம் 84-88)

குருநாதர் இட்ட கட்டளைப்படி யாம் திருத்தணியில், மலைக்குச் செல்லும் பொழுது, ஒருவர் எம்மைச் சந்தித்து, நான் ஒரு விவசாயி, இங்கிருந்து பத்தாவது மைலில் எங்கள் கிராமம் இருக்கிறது. என் மனைவிக்கு ஒன்றரை வருட காலமாக, எழுந்து உட்காரவோ, நடக்கவோ, முடியவில்லை. என்ன நோய் என்று தெரியவில்லை? எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை என்று கூறினார்.

சாமி எங்கள் ஊருக்கு வந்து, “என் மனைவியின் நோயைப் போக்கி, நடக்க வைக்க வேண்டும்” என்று கண்களில் நீர் ததும்ப எம்மை ஊருக்குக் கூப்பிட்டார்.

யாம் இங்கு தியானத்திலிருந்துவிட்டு, அதன் பிறகுதான் எங்கும் வரமுடியும் என்றோம்.

தாங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ, அதுவரைக்கும் இங்கேயே இருந்து, தங்களை அழைத்துக் கொண்டு போகிறோம் என்றார் அவர்.

விவசாயியைக் கூட்டிக்கொண்டு, திருத்தணி மலைமீது ஏறிச் சென்றேன். குருதேவர் கூறிய இடத்தை அடைந்தவுடன், அவரை நான்கு நாள் கழித்து வரும்படிச் சொல்லிவிட்டு, குருதேவர் குறிப்பிட்ட இடத்தில், தியானத்தில் அமர்ந்து கொண்டேன். யாம் இங்கிருக்கிறோம் என்று, ஊரில் யாரிடமும் தெரியப்படுத்தக்கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டோம்.

யாம் தியானத்தில் இருந்த 4 நாள்களிலும், பல நிலைகள் காட்சிகளாகத் தெரிந்து கொண்டிருந்தன. யாம் காட்சிகளாகப் பார்த்த பல நிலைகளுக்கும், குருதேவர் விளக்கி, உபதேசித்து அருளிவிட்டு, நாளை வரும் விவசாயியின் ஊருக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு மறைந்து விட்டார்.

நான்காம் நாள், யாம் இருக்கும் இடத்திற்கு விவசாயி வந்து, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். விவசாயின் மனைவி, வாத நோயால், கை, கால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தார்.

அன்று இரவு, தியானத்தில் அமர்ந்தேன். அந்த சமயம், காட்சியாக, விவசாயியின் தாயார், வாத நோயுடன் கை, கால் வராமல் படுக்கையிலிருந்து கொண்டு, வேதனையுடன், பல முறை மருமகளைக் (விவசாயின் மனைவியை) கூப்பிட்டார்கள்.

அப்பொழுது மருமகள், “சனியன் தொலைய மாட்டேனென்கிறதே”, என்று முனங்கிக் கொண்டே, மாமியாரைப் பார்க்க அருகில் வந்தார்.

“ஒரு பக்கமாக எனக்குக் கைகால்கள் வலிக்கின்றது, என்னை அந்தப் பக்கம் கொஞ்சம் புரட்டிவிடு” என்றார்கள்.

மருமகளோ, ‘நீ செத்தால்தான் எனக்கு விடிவு காலம் வரும்” என்று சொல்லிக் கொண்டே, வேண்டா வெறுப்புடன் மாமியாரை ஒரு பக்கமாகப் புரட்டிவிட்டார்.

இதைக் கண்டு, மாமியார் வேதனையுடன் “இப்படியெல்லாம் ஏசுகிறாயே, முருகா!” என்று சொல்லி வேதனையுடன் பெருமூச்சு விட்டார்கள்.

மருமகளுக்குக் கோபம் வந்து, என்ன இப்படியெல்லாம் பேசுகிறாய் என்று ஏச, மாமியாரும் வேதனையுடன் பேசினார்கள்.

மருமகள் கோபத்துடன் ஏசிய உணர்வலைகள்,
மாமியாரின் இரத்தத்தில் கலப்பது, காட்சியாகத் தெரிந்தது.
இதைப் போன்று,
மாமியார் சாபமிட்டு ஏசிய உணர்வலைகள்
மருமகளின் உணர்வுகளில் உந்தப்பட்டு,
மருமகளின் இரத்தத்தில் கலப்பதும், காட்சியாகத் தெரிந்தது.

மேற்கூறியவாறு, ஒருவருக்கொருவர் பல மாதங்களாக நினைத்தும், ஏசியும் பேசிக் கொண்ட உணர்வலைகள், அதாவது,
மருமகள் மாமியாரை நினைத்து ஏசிய உணர்வலைகள், மாமியாரின் உடலில், வினைகளாக விளைகின்றன.
மாமியார் மருமகளை நினைத்து, சாபமிட்டுப் பேசிய உணர்வலைகள் மருமகளின் உடலில், வினைகளாக விளைகின்றன.

வேதனை உணர்வுடன், மருமகளை எண்ணியவாறே மாமியாரின் உயிராத்மா உடலைவிட்டுப் பிரிந்து சென்றது.

மாமியார் எப்பொழுது இறக்குமோ?
என்ற வேதனையுடன் ஏங்கி இருக்கும் நிலையில்,
மாமியார் இறந்ததைப் பார்த்தவுடன், மாமியாரின் உயிராத்மா,
மருமகளின் சுவாசத்தின் ஈர்ப்புக்குச் சென்று,
இரத்தத்தில் கலந்துவிடுகின்றது.

சில நாட்களில், மருமகளின் உடலில், மாமியாரின் உயிராத்மா இயங்கத் தொடங்கி, மாமியார் எந்த நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ, அதே வேதனையை, மருமகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலைகள்.

இவை, எனக்குக் காட்சியாகத் தெரிந்து கொண்டிருக்கும் சமயம். குருதேவர் காட்சி கொடுத்து, இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டுவிட்டு, அதற்குச் சில வழிமுறைகளை உணர்த்தி, உபதேசித்தார்கள். பிறகு, தியானத்தைக் கலைத்துவிட்டேன்.

விவசாயின் மனைவியிடம், நீங்களும் உங்கள் மாமியாரும் அடிக்கடிக் கோபித்துக் கொள்வீர்களா? என்று கேட்டேன்.

ஆம், என்று ஒப்புக் கொண்டார்கள்.

யாம் சொல்கிறபடிச் செய்தால், நோய் தீரும் என்றதும், தாங்கள் எப்படிச் செய்யச் சொல்கின்றீர்களோ, அதன்படி நாங்கள் செய்கிறோம் என்றார்கள்.

விவசாயின் குடும்பத்தில் உள்ள,
அனைவரையும் தியானத்தில் அமரச் செய்து,
தியானமிருந்து, கண்களைத் திறந்தவுடன்,
விவசாயின் தாயாரின் பெயரைச் சொல்லி, அவர் உயிராத்மா,
மகரிஷிகளின் அருள் ஒளியால், புனிதம் பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அனைவரையும்,
குருதேவர் உணர்த்திய வழியில், சொல்ல வைத்தோம்.

இவ்வாறு, பத்து நாள்கள் தியானமிருந்து சொல்ல வைத்ததனால், விவசாயின் மனைவி, 10 நாள்களில் மெள்ள மெள்ள எழுந்து நடக்கலானார்.

வியவசாயின் குடும்பத்தில், அனைவரும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். விவசாயின் மனைவி, இனி நான் யாரையும் மனம் நோகும்படிப் பேச மாட்டேன் என்று வேண்டிக் கொண்டார்.

தொடர்ந்து நீங்கள் தியானம் செய்தால், உங்களை அறியாது வரும், கோபம், குரோதம், பயம், நீங்கி, உங்கள் குடும்பத்தில் நலமும் வளமும் பெற்று வாழ்வீர்கள், என்று யாம் ஆசீர்வதித்தோம்.

(பக்கம் 88-92)

குருதேவர், எம்மைத் திருவண்ணாமலைக்குச் செல்லும்படிக் கூறினார். நான் திருவண்ணாமலைக்குச் சென்றேன். தனிமையில் பத்து மைலில் நடப்பதும், இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வதும், ஆக, இவ்வாறே நடந்து சென்றேன்.

இரவு 8.00 மணியானதும், மரத்தடியில் தியானத்தில் அமர்ந்து விடுவேன். அப்பொழுது, குருதேவர் பல நிலைகளைக் காட்சியாகவும், உணர்வப்பூர்வமாகவும் உணர்த்துவார்கள். இரவு 11.00 மணி அளவில், படுத்துக் கொள்ளும்படிக் கூறுவார்கள். படுத்துக்கொள்வேன். காலை 5.00 மணியளவில் எழுந்து நடப்பதும், இடையில் புளியமரத்தைப் பார்த்தால், புளியம் தழைகளைப் பறித்துப் பையில் வைத்துக்கொண்டு, அதைக் கொஞ்சம் மென்று தின்று கொண்டே நடப்பேன்.
.
இவ்வாறு ஐந்து நாட்கள் நடந்து, ஐந்தாவது நாளில், மாலை 3.00 மணியளவில் திருவண்ணாமலை அடிவாரம் வந்து சேர்ந்தேன். அங்குள்ள ஒரு மடத்தில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில், உறக்கம் வந்துவிட உறங்கிவிட்டேன்.

இரவு 7.30 மணிக்கு முழித்த என்னை சிறிது தூரத்தில், வேறு ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும், அருணகிரிநாதரின் வாழ்க்கை நிலைகளை உபதேசிக்கலானார்.

அதாவது, அருணகிரி தன் செல்வச் செருக்கினால், பெண் மோகம் கொண்டு, காமவெறியினால், பல பெண்களின் படுக்கையறைகளை அடைந்து, ஊதாரித்தனமாக செல்வத்தைச் செலவழித்து, செல்வம் அழிந்து, பெண் வியாதியாகி, முற்றி, பெருவியாதியாக மாறி, மேனியின் அழகு விகாரமாகியது. மேனி அரித்தாலும் காமம் தணியாது, காமத்தின் உந்தலினால், தன் ஆசை நாயகிகளை அணுக, ஆசை நாயகிகளோ அருணகிரியின் விகாரத்தோற்றத்தைக் கண்டு, காறி உமிழ்ந்தனர்.

உற்றார் உறவினர் வெறுக்க, ஊர் மக்கள் சிரித்தாலும், செல்வத்தை இழந்திருந்தாலும், மேனியில் அரிப்பு மொய்த்தாலும், தன் காமத்தின் உந்தலினால், மோகம் தணியாது, தன் சகோதரியிடமே காமத்தின் இச்சைகளைச் சொல்லி, ஆசை நாயகிகளை அடையப் பொருள் கேட்கின்றார், அருணகிரி.

அருணகிரியின் சகோதரி, தன் சகோதரனின்பால் உள்ள பாசத்தால், அவனையும் அறியாது, என்னிடமே தன் இச்சைகளைச் சொல்லிப் பொருள் கேட்கின்றானே என்ற வேதனையுடன், “உனக்கு இச்சைதானே தீர வேண்டும். இதோ இந்த உடலில், (தன் உடலைக் காண்பித்து) உன் இச்சைகளைத் தீர்த்துக் கொள்” என்று சொல்லியவாறே, கீழே விழுந்து மயங்கி, சகோதரி உயிர் துறந்தார்.

சகோதரியின் நிலையைக் கண்ட அருணகிரி, தன் உடலின் வாழ்க்கையை வெறுத்து, உடலை மாய்த்திடும் எண்ணம் கொண்டு, கோபுரத்தின் மீதேறி, கீழே வீழ்ந்திடும் தருவாயில்,
அடுத்த பிறவியாவது,
”இந்த உடலைவிட்டு பிரியும் உயிராத்மா
உயர்ந்த குணங்கள் கொண்ட உடலைப் பெறட்டும்” 
என்ற உணர்வுகள் உந்தி, விண்ணை நோக்கி ஏங்கினார்.

அவ்வாறு ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தெய்வீகக் குணங்களின் உணர்வுகள் கொண்ட, ஒரு மெய்ஞ்ஞானியின் உயிராத்மா, அருணகிரியின் ஏக்கத்தின் சுவாசத்தில் ஈர்க்கப்பட்டு, இரத்தத்தில் கலந்ததனால், அருணகிரியின் உணர்வுகள், மெய்ஞ்ஞானத்தின் உணர்வுகளாக மாறின.

அதனால், கோபுரத்தில் இருந்து கீழே விழாமல், மெய்ஞ்ஞான உணர்வாக, புலமைகள், பாடும் ஆற்றல்கள் அருணகிரி பெற்றார் என்பதை குருதேவர் உபதேசித்து அருளினார்.

அருணகிரியின், இரத்தத்தில் குடிகொண்டுள்ள மெய்ஞ்ஞானியின் உயிராத்மா,
“தன் மெய்ஞ்ஞானத்தின் ஆற்றல் மிக்க உணர்வலைகளை ஈர்ப்பதை”
அருணகிரி சுவாசிப்பதால்,
அருணகிரியின் உயிரில் உராயும்பொழுது,
தெய்வீக உணர்வுகளின் குணங்களைப் பாடச் செய்கின்றது.

சுவாசித்த மெய்ஞ்ஞானியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள்
இரத்தத்தில் கலந்து,
இரத்தம் தசைகளிலும், உடல் உறுப்புகளிலும் கலப்பதால்,
தசைகளிலும், உடல் உறுப்புகளிலும், அணுத்திசுக்களாக உருப்பெறுகின்றன.
உருப்பெற்ற அணுத்திசுக்கள் நுண்ணணுக்களாக விளைந்து,
அருணகிரியின் உயிராத்மாவின் ஈர்ப்பிற்குச் சென்று,
உயிரின் அணைப்பில், உயிராத்மா இயங்குகின்றது.

அருணகிரியின் இரத்தத்தில் குடிகொண்டுள்ள மெய்ஞ்ஞானியின் உயிராத்மா, மேலும் தன் ஆற்றலைப் பெருக்கிக் கொள்கின்றது. அருணகிரியின் உடலில் மெய்ஞ்ஞானியின் உணர்வலைகள் பதிந்து, வளம் பெற்று இருந்ததனால், அருணகிரி, தன் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டு, தான் கண்டறிந்த உண்மை நிலைகளைப் பாடலாகவும், உபதேசமாகவும் மக்களுக்கு உணர்த்தலானார்.

இவ்வாறு, ஊர் ஊராகச் சென்று, அங்கு அமைந்துள்ள ஆலயங்களில், தான் கண்டறிந்த தெய்வகுணங்களின் உணர்வுகளைப் பாடியும், உபதேசித்தும் வரும் நிலையில், அதைக் கேட்டறிந்த மக்களுக்கு, அருணகிரியின்பால் பக்தியும், அன்பும், பாசமும் பெருகலாயின.

இதைக் கண்டு பொறாமை கொண்ட மந்திரவாதிகள், அதாவது ஆவிகளைக் கைவல்யப் படுத்திக்கொண்டு, வேள்விகள் செய்து, தெய்வத்தின் பெயரால் பல அற்புதங்களைச் செய்து, மக்களையும் அரசனையும் ஏமாற்றி, புகழ் தேடி வந்த மந்திரவாதிகள், தங்கள் புகழ் மங்கி வருவதைக் கண்டு, அருணகிரிக்குப் பல இன்னலகளை, விளைவித்தனர்.

மந்திரவாதிகளின் செய்கைகளைப் பொருட்படுத்தாது, பேருண்மையின் உணர்வலைகளின் ஆற்றல்களை, பல வருடங்களில் தனக்குள் வளர்த்துக் கொண்ட உயிராத்மாவை, ஒளியாக வளர்த்துக் கொண்டு, உடலை விட்டுப் பிரிந்து ஒளியாக வெளியேறினார் என்றும், இந்த நிலைகள் அனைத்தையும் குருதேவர் காட்சியாகக் காண்பித்து, எமக்கு உணர்த்தினார்கள்.

மேற்கூறியவாறு, அருணகிரியின் வாழ்க்கையில், தன் இரத்தத்தில் குடிகொண்டுள்ள மெய்ஞ்ஞானியின் உயிராத்மாவின் வளர்ச்சியில், அருணகிரியின் உயிராத்மா, மெய்ஞ்ஞானத்தைப் பெறும் உயிராத்மாவாக, வளர்ச்சி பெறுகின்றது.

இரத்தத்தில் குடிகொண்டுள்ள மெய்ஞ்ஞானியின் உயிராத்மா,
அருணகிரியின் உடலை இயக்கி,
சூரியன் வெளிப்படுத்தும் காந்த ஆற்றலையும்,
கோள்கள், நட்சத்திரங்கள், சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்தும்
பேராற்றல்களையும் பெற்று,
தான் பெற்ற, ஆற்றல்மிக்க உணர்வலைகளால் உருப்பெற்ற
உண்மையின் நிலைகளைப் பாடல்களாகப் பாடி,
பாடிய பாடல்களை, ஒலியலைகளாகப் படரச் செய்வதும்,
அருணகிரியின் உடலில் இருந்தவாறே,
பேராற்றல் மிக்க உயிராத்மாவாக வளர்த்துக் கொண்டு,
அருணகிரியின் உடலை விட்டு
மெய்ஞ்ஞானியின் உயிராத்மா ஒளியாக வெளிவந்து,
சப்தரிஷி மண்டலங்களின் சுழற்சி வட்டத்தைச் சென்றடைகின்றது. 


(பக்கம் 104-106)

குருநாதர், எம்மைக் கோலமாமகரிஷி பெற்ற நிலைகளை அறிவதற்காக, கொல்லூருக்குச் செல்லும்படிக் கூறினார். நான் அங்கு சென்று, தியானத்தில் அமரும் சமயம், அடைமழைக் காலம். குருதேவர் ஆணைப்படி, மரத்தடியில் மழையில் நனைந்தவாறே தியானத்தில் அமர்ந்திருந்தேன். குருதேவர் காட்சி கொடுத்து, சிரித்துவிட்டு, கோலமாமகரிஷியின் தபோவலிமையையும், அவர் பெற்ற ஆற்றலையும், விவரித்து உபதேசிக்கலானார்கள். அச்சமயம்,
நம் பூமி சுழல்வது, காட்சியாகத் தெரிகின்றது.
வடதுருவம், தென்துருவம் இந்த இரு பக்கங்களிலும்,
மேகம் போன்று, உள்ளே செல்வது தெரிகின்றது.
பூமியின் நிலப்பரப்பை, அந்த மேக அடர்த்தி அடைந்தவுடன், பனிப்பாறைகளாக உறைவது தெரிகின்றது. பூமியின் சுழற்சி வட்டத்தில், வெப்பமாவது தெரிகின்றது.

பூமி சுழன்று கொண்டுள்ள ஓடுபாதை ஓரங்களில், சிறிய கல் முதல் பெரும் பாறைகள் போன்று, மிதந்து கொண்டிருப்பது தெரிகின்றது. பாறைகளாக மிதந்து கொண்டிருப்பதை, குருதேவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

அதாவது, கோள்களிலிருந்தும், நட்சத்திரங்களிலிருந்தும், சூரியனிலிருந்தும் வெளிப்பட்டு வரும் உணர்வலைகளும், தூசுகளும், துகள்களும், சந்தர்ப்பவசத்தால் பல நுண்ணணுக்களும், கலந்து, குவிந்து, ஒன்று சேர்ந்த பொருள்கள்தான் பாறைகளாகத் தெரிந்தது.

அந்தப் பாறையான பொருள்களுக்குள், ஆற்றல் மிக்க அணுக்கள் உண்டு. ஒவ்வொரு பாறைக்கும், ஒவ்வொரு விதமான ஆற்றல் உண்டு, என்று விளக்கினார்.

பூமியின் சுழற்சியால் ஏற்படும் வெப்ப வட்டத்தில், பாறைகள் (பொருள்கள்) சிக்கி, ஆவியாகி, அணுக்களாகப் புவி ஈர்ப்பில் படர்வது தெரிகிறது. பூமியின் சுழற்சி வட்டத்தில், வெப்பமாகும் நிகழ்ச்சி தெரிகிறது.

அதிலிருந்து வெளிப்படும் சப்தம் ‘ஓ’... என்ற நாதமாகக் காதில் கேட்கின்றது. பூமியின் சுழற்சி வட்டத்தின் வெப்ப அலைகள், புவி ஈர்ப்பிற்குள் செல்லும்பொழுது, வெப்பம் தணிந்து, புவி ஈர்ப்பில் பரவி இருக்கும், பல உணர்வுகள் கொண்ட அணுக்களில் அசைவது தெரிகின்றது.

தணிந்த வெப்ப அலைகள் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதும், பூமியின் ஈர்ப்பில் வந்து நிலப்பரப்பில் ‘ம்...ம்...ம்’ என்று அடங்கிக் கொண்டேயிருப்பதும் தெரிகின்றது. அச்சமயம், குருதேவர் தணிந்த வெப்பத்தின் நிலைகளை, விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். அதாவது,
தணிந்த வெப்ப அலைகள் பூமியின் ஈர்ப்பில் வந்து
அடங்கிக் கொண்டேயிருப்பதனால்,
பூமியின் உள்ளும், புறமும் தணிந்த வெப்பம் இருந்து கொண்டேயிருப்பதனால்,
பூமியின் வெப்பத்தால், பூமிக்குள் சகல பொருள்களும்,
புறத்தில் தாவர இனங்களும், உயிரினங்களும் வாழ,
வளர்ச்சிப் பெறக் காரணம் ஆகின்றன.
பூமியின் வெப்பத்தால், துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி, நீராகக் கடலில் கலக்கின்றன என்று விளக்கினார்கள்.

மேலும், குருதேவர் உபதேசிக்கையில் பூமியின் இயற்கையின் செயல்நிலைகளைக் கோலமாமகரிஷி, தன் தவவலிமையால் கண்டறிந்ததை, நீ இப்பொழுது காட்சியாகப் பார்த்தாய் அல்லவா!

இதைப் போன்று, அவர் கண்டறிந்த ஆற்றல்களைத் தனக்குள் பெற்று, தன் உயிராத்மாவை ஒளி நிலையாக மாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், தனக்குள் வளர்த்துக் கொண்ட ஆற்றலின் நிலைகளைக் காவியமாகத் தொகுத்து, தெய்வச் செயல் என்ற பெயரில் “மூகாம்பிகை என்று பெயர் வைத்து, இந்த தெய்வ நிலைகளைக் காவியமாகப் படைத்து, பாமர மக்களும், தெய்வ நிலைகளைப் பெறும் வண்ணம் அருள்பாலித்தார்” என்றார்கள்.

(பக்கம் 152-153)

இன்றைய விஞ்ஞான உலகில், பல ஆயிரக்கணக்கான ஊர்களிலிருந்து ரேடியோக்களில், பல அலைவரிசையில் ஒலிப்பரப்பு செய்து, காற்றுடன் கலக்கச் செய்கின்றனர். அதை நம் வீட்டில் உள்ள ரேடியோவில், அதாவது டெல்லி என்று வைத்துக் கொள்வோம்; அந்த அலைவரிசையில் உள்ள காந்தத்தில், ஈர்ப்பு காந்தத்தை இணைத்தவுடன், டெல்லி அலைவரிசையில் ஒலிப்பரப்பும் பாட்டுக்களையோ, பேச்சுக்களையோ நம் வீட்டு ரேடியோவில் கேட்கின்றோம் அல்லவா!

அதைப்போன்று, நம் உடலில் பற்பல உணர்வலைகள், பதிந்து இருப்பதால், நம் அன்பான குணத்தின் உணர்வில், எண்ணத்தைச் செலுத்தியவுடன், நம் உடலில் பதிந்துள்ள ஈர்க்கும் காந்தத்தில் இணைந்து, காற்றில் கலந்துள்ள அன்பான குணத்தின் உணர்வலைகளை, நம் உடல் ஈர்த்து சுவாசிக்கின்றது.

நம் உடலில் ஜீவ அணுக்களை இயக்கும் “உயிர்”,
நம் நெற்றியின் புருவ மத்தியில், உட்புறமாக இருந்துகொண்டு,
உடலை இயக்கும் மூலக்கருவாக,
குருவாக, உயிர் இருக்கும் நிலையில்,
உடலில் விளைந்த
அனைத்துக் குணங்களின் உணர்வலைகளை,
உயிரின் ஈர்ப்பில் அணைத்துக் கொண்டு,
மறு உடல் உருப்பெறச் செய்யும்,
கருவினையாகச் சேர்த்துக் கொண்டு இருக்கின்றது.

நம் அன்பான குணத்தின் உணர்வில் எண்ணத்தைச் செலுத்தியவுடன், நம் உடலில் பதிந்துள்ள, ஈர்க்கும் காந்தத்தில் இணைந்து, காற்றில் கலந்துள்ள அன்பான குணத்தின் உணர்வலைகளை நம் உடல் ஈர்த்து சுவாசிப்பதால், உயிரின் காந்தத்தில் படும்பொழுது, கனிவாகப் பேசவும், கனிவுக்குத்தக்க செயலைச் செய்விக்கின்றது. அச்சமயம், வாயில் உமிழ்நீர் கனிவாகச் சுரந்து, நாம் உட்கொண்ட ஆகாரத்தைக் கனிவான நிலையில் ஜீரணிப்பதால், ஆகாரத்தின் சத்து கனிவான இரத்தமாக மாறுகின்றது.

அன்பான குணங்களின் உணர்வலைகளின் நுண்ணணுக்களை, நாம் சுவாசிப்பதால், இவை நம் உடல் முழுவதும் செல்லும் பொழுது, கனிவான நுண்ணணுக்களை இரத்தம் வடித்துக் கொள்கின்றது. கனிவான மூச்சு வெளிப்படுகின்றது. உடலும் மனமும் மகிழ்கின்றது. அப்பொழுது செயலும் மகிழ்ச்சியுடையதாக அமைகின்றது.

இரத்தத்தில் கலந்துள்ள, கனிவான ஆகாரத்தின் சத்தும்,
இரத்தத்தில் வடித்துக் கொண்ட,
கனிவான உணர்வலைகளின் நுண்ணணுக்களும்,
இந்த இரண்டும், உயிரின் இயக்கத்தால் தசைகளாக மாறும் பொழுது, தசையும் உடலும் களிப்படைகின்றது.
(பக்கம் 155-165)

நீங்கள் தர்ம சிந்தனையுடன் அன்பு, பரிவு, பாசம், ஞானம், தைரியம், சாந்தமாக வாழ எண்ணி, உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலும், ஒருவர் மற்றொருவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அவரைப் பார்க்கும் பொழுது, உங்கள் புலனறிவால், கோப உணர்வைக் கவர்ந்து, உடலில் உள்ள ஈர்ப்பு காந்தத்தில் இணைந்தவுடன், உடல், காற்றில் கலந்துள்ள கோப உணர்வலைகளை ஈர்ப்பதனால், உங்கள் சுவாசத்துடன் கலந்து, உயிரில் உராய்வதனால், ஆத்திர உணர்வின் எண்ணம் உங்களையறியாமலேயே ஆத்திரத்துடன் பேசவோ, கேட்கவோ தூண்டுகின்றது.

அச்சமயம், உங்கள் உமிழ் நீரும் மாறுபட்டு, நீங்கள் உட்கொண்ட ஆகாரத்துடன் கலப்பதால், குடலில் ஒருவித எரிச்சல் ஏற்படுகின்றது. அப்பொழுது, எதைச் சாப்பிட்டாலும், சுவை குன்றியே இருக்கும்.

அதனால், ஆகாரம் குறைத்துச் சாப்பிட்டு உடல் சோர்வடையக் காரணமாகின்றது. உணர்வலைகளை இரத்தம் வடித்துக் கொள்வதனால், இரவில் உறங்கும் பொழுது, இரத்தம் தசைகளாக மாறும் சமயம், உடலில் ஒருவித எரிச்சலும், தூக்கமின்மையும் ஏற்படக் காரணமாகின்றது.

உதாரணமாக, நீங்கள் வயலைப் பக்குவப்படுத்தி, நெல்லை விதைத்து, அதனால், நெல் முளைத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம். காற்றில் மிதந்து வந்த, வேண்டாத  வித்துக்கள் வயலில் வீழ்ந்து களைகளாக முளைத்து, நெல்லிற்கு இட்ட உரத்தைக் களைகள் எடுத்துக் கொண்டு, களைகள் பெருகுகின்றன.

களைகளை நீக்கவில்லையென்றால், நெல்பயிர் வளர்ச்சி குன்றி, நெல்லின் தரம் குறைந்து விடுவதைப் போன்று, நீங்கள் சுவாசித்த கோப குணங்களின் உணர்வலைகளின் நுண் அணுக்கள் உங்கள் இரத்தத்தில் பெருகி, தசைகளாக மாறும் பொழுது, தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் பெருகி, மேல்வலி, தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதும், அதனால் உடல் சோர்ந்து, எச்செயலையும் சோர்வுடன் செய்யக் காரணமாகின்றன.

நீங்கள் உலக நிலைகளை அறிந்துகொள்ளும் வண்ணம், பத்திரிக்கைகளைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பத்திரிக்கை வாசகத்தில், “இரவு 8.00 மணியளவில், உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, திடீர் என்று கொள்ளையர்கள் வீடு புகுந்து, வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அடித்துப் படுகாயப்படுத்திப் போட்டுவிட்டு, வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள்” என்று படிக்கும் பொழுது, உங்களையறியாது, பயம் கலந்த வேதனை உணர்வுகளைச் சுவாசிப்பதனால், அவை உங்கள் இரத்தத்தில் கலந்துவிடுகின்றன.

அன்று இரவு, நீங்கள் அமைதியாகப் படுத்திருந்தாலும்,
வேறு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும்,
எதிர்பாராது சன்னல் கதவின் ஓசை “டப்” என்று உங்கள் செவிகளில் கேட்டவுடன்,
உங்களையறியாது பய உணர்வு உந்தப்பட்டு,
உடல் சிலிர்த்து, பய உணர்வலைகளை சுவாசித்து,
மேலும் மேலும், பய உணர்வுகள் பெருகக் காரணமாகின்றன. இது போன்று அடிக்கடி நேர்ந்தால், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், மனத்தில் ஒருவிதப் பயத்துடன் செயல்படும்நிலை ஏற்படுகின்றது,

நீங்கள் வேலையின் நிமித்தம், தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெருவின் முனை அருகில் செல்லும் சமயம், ஒரு கார் திடீரென்று திரும்புகையில், உங்கள் மீது மோதும் நிலையை நீங்கள் பார்க்க நேர்ந்தால், கண்களின் ஈர்ப்பு காந்தத்தில் பாய்ச்சுவதால், உங்கள் உடல் துரித நிலையில் பய உணர்வுகளை அதீதமாக சுவாசித்து, துரிதமாக இயங்கி, உடல் நடுக்கமாகி, உங்களைக் காக்கும் எண்ணம் உருப்பெற்று, விபத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.

அதே சமயத்தில், அதீதமான பயத் துடிப்புடன் ஓட்டுநரைப் பார்க்கும் பொழுது, ஆத்திர உணர்வுகள் உந்தப்பட்டு ஆத்திர உணர்வுகளையும் சுவாசிக்க நேருவதால், பயத் துடிப்புடன் ஆத்திர உணர்வலைகள் உயிரில் உராய்வதால், புலன்களின் பொறிகள் இயக்கப்பட்டு, ஆத்திரத்துடன் பேசுவதும், அதற்குரிய செயலையும் செய்விக்கின்றன.

நீங்கள் விபத்திலிருந்து தப்பியதைப் பார்த்தவர்கள், உங்களைப் பார்த்து, “நீங்கள் செய்த தர்மத்தால் உங்களை தெய்வம் காப்பாற்றியது”, என்று ஆறுதல் கூறுவார்கள். ஆனால்,  நீங்கள் சுவாசித்த அதீத பய ஆத்திர உணர்வலைகளின் நுண் அணுக்கள், இரத்தத்தில் கலந்து, தசைகளாக மாறுகின்றன.

வயல்களைப் பக்குவப்படுத்தி, நெல்லை விதைத்து, பயிராக முளைத்து வரும் நிலையில், ஏங்கோ காற்றில் கலந்து வந்த வித்துகள், வயலில் வந்து வீழ்ந்தால் அதுவும் முளைத்துவிடுகின்றது.

நீங்கள் எதிர்பாராது, அதீத பய உணர்வுடன் ஆத்திர உணர்வையும் சுவாசித்ததால்,
இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுவதும்,
தசைகளில், பய உணர்வுகளின் அணு திசுக்களும்,
ஆத்திர உணர்வுகளின் அணு திசுக்களும் உருப்பெற்று,
அதன் இயக்கத்தால், தசைகளில் அமிலங்கள் சுரந்து,
இந்த அமிலங்கள், உடலை இயக்கும் நரம்புகளில் ஈர்க்கப்பட்டு,
நரம்புகள் இயங்குவதால்,
நரம்புகளில் உள்ள அமிலங்களின் உணர்வுகளின் சத்தை,
எலும்பின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு,
எலும்பினுள் ஊனாகவடித்துக் கொள்கின்றன.
இந்த ஊனைத்தான், ஞானிகள்  ஊழ்வினை,  என்று பெயர் வைத்தார்கள்.

எடுத்துக் காட்டாக வேப்பமரத்தை எடுத்துக் கொள்வோம். வேம்பின் வித்து எத்தனை வகையான உணர்வின் சத்தில் வித்தானதோ, அது நிலத்தில் முளைத்து வரும்பொழுது, அதன் உணர்வுகளின் சத்தில் கலந்துள்ள ஈர்ப்பு காந்த சக்தியால், நிலத்தில் உள்ள நீரையும், காற்றில் இருந்து வரும் தன் இனமான உணர்வுகளின் சத்தை ஈர்த்துக் கொண்டு, ஈர்த்துக் கொண்ட வெப்பத்தினால், நீரில் கலந்துள்ள உணர்வின் சத்துகள் அனைத்தும் உறைந்துவிடுவதால், வெப்பத்தின் இயக்கத்தினால் நீரில் வேப்ப மரமாக வளர்கின்றது.

இதைப் போன்று அதீத பயகுணத்தின் உணர்வலைகளின் சத்தையும், ஆத்திர குணத்தின் உணர்வலையின் சத்தையும், எலும்புக்குள் ஊனாக வடித்து வைத்துவிடுகிறது.
அவ்வாறு வடித்து வைப்பதனால்
உயிரின் இயக்கத்தால்,
எலும்பின் காந்த ஈர்ப்பினால், 
உடல், காற்றில் பரவி இருக்கும் பய உணர்வலைகளையும்,
ஆத்திர உணர்வலைகளையும் ஈர்க்கின்றது.

வேப்ப மரம், தன் உணர்வான கசப்பான சத்தை ஈர்த்து, தன்னை வளர்த்துக் கொண்டு, தான் வளர்த்துக் கொண்ட கசப்பான உணர்வுகளின் மணத்தை வெளிப்படுத்தும் பொழுது, அதை நீங்கள் நுகர்ந்தால், அதன் கசப்பான உணர்வலைகள் உங்கள் முகத்தைச் சுளிக்கச் செய்கின்றன.

அதைப் போன்றே, உங்கள் உடல் ஈர்க்கும், பய குணத்தின் உணர்வுகளையும், ஆத்திர குணத்தின் உணர்வுகளையும் நீங்கள் சுவாசிக்கும் பொழுது, முகம் கடுகடுப்பு அடைகின்றது.

வேம்பின் இலைகளைச் சாப்பிட்டால் கசப்பின் உணர்வுகள் குடலில் இயங்கி, குமட்டல் ஏற்படும்பொழுது, வாந்தி வந்து விடும் என்ற பயம் கலந்த எண்ம் தோன்றுகின்றது.

இதைப் போன்று, உங்கள் உடல் ஈர்க்கும் பய குணத்தின் உணர்வுகளையும், ஆத்திர குணத்தின் உணர்வுகளையும், நீங்கள் சுவாசித்துக் கொண்டு இருப்பதனால், இரத்தம் வடித்துக் கொண்டதால், பய, ஆத்திர குணங்களின் உணர்வலைகள் இரத்தத்தில் நுண் அணுக்களாக வளர்ச்சி பெற்று,  இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் வரக் காரணமாகின்றது.

மேலும்,
அதனால் அதிர்ச்சியான பேச்சைக் காதில் கேட்டால்,
பயமான எண்ணம் தோன்றுவதும்,
அச்சமயத்தில், பயத்தினால் சிந்திக்கும் திறன் இழந்து கோபப்படுவதும்,
ஏதாவது ஒரு பொருள், கீழே விழும் ஓசையைக் காதில் கேட்டால்
உங்களை அறியாது உடல் சிலிர்ப்பதும்,
அதனால் பயமான எண்ணங்கள் தோன்றுகின்றது.
இதைப் போன்று,
எச்செயலை நீங்கள் செய்ய முற்பட்டாலும்,
உங்களை அறியாது, அவசர ஆத்திர உணர்வுடன் செயல்படத் தூண்டுகின்றது.
ஆனால், சிறிது தடைப்பட்டாலோ,
கோபமான எண்ணம் உருப்பெற்று விடுகின்றது.

      இரத்தம் தசைகளாக, உடல் உறுப்புகளாக மாறும்பொழுது,  அதில் பய, ஆத்திர குணங்களின்  அணு திசுக்களாக வளர்ச்சி பெற்று,  தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் தசைவாதம், குடல்வாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் வரக் காரணமாகின்றது.

அதே போல், தசைகளில் உருவான அமிலங்களை, உடல்  உறுப்புகளை இயக்கும் நரம்புகள் ஈர்த்துக் கொள்வதால்,  அதனால் கீல்வாதம், மூட்டுவாதம், முடக்குவாதம் போன்ற நோய்கள் உருப்பெறக் காரணமாகின்றது.

நாம் நமது வாழ்க்கையில், நல்ல குணங்களின் உணர்வுடன் சுவாசித்து, உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தாலும், எதிர்பாராது
பய குணங்களின் உணர்வையோ,
கோப குணங்களின் உணர்வையோ,
வேதனையின் குணங்களின் உணர்வையோ,
ஆத்திர குணங்களின் உணர்வையோ,
குரோதமான குணங்களின் உணர்வையோ,
சோர்வான குணங்களின் உணர்வையோ,
சஞ்சலமான குணங்களின் உணர்வையோ,
சந்தர்ப்பவசத்தால் சுவாசிக்க நேர்ந்தால்,  நல்ல குணங்கள் பலவீனமாகி, தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் நோய்கள் உருப்பெற்று, அதில் விளைந்த  நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று,  உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்குவதும், உயிராத்மா வளர்ச்சி குன்றி,  உடலை விட்டு உயிராத்மா பிரிந்து செல்கின்றது.  இவ்வாறு பிரிந்த உயிராத்மா, மறு பிறவியில் மனித உருப் பெறும் தகுதியை இழக்கின்றது.

இவ்வாறே, சாதாரண மனிதர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை, சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு ஒப்ப, சந்தர்ப்பவசத்தால் கண்களால், காதுகளின் புலனறிவால் ஈர்க்கப்பட்ட, கோபம், குரோதம், ஆத்திரம், அதீத பயம் போன்ற குணங்களின் உணர்வலைகளைச் சுவாசித்து, 
உடல்களில் பதிவாகி உருப்பெற்ற நோய்களைத் தான் 
விஞ்ஞானிகளால் போக்க முடியும். ஆனால்,
நோய்களினால் உடலில் விளைந்த நுண் அணுக்கள்,
உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று,
உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கும், 
உணர்வுகளின் அணுசிசுக்களைமாற்ற
விஞ்ஞானிகளால் முடியாது. 

விஞ்ஞான முன்னேற்றத்தினால், மனித உடல்களைப் பாதுகாக்க முடியுமே தவிர,  அவர்களின் உடலை இயக்கும் உயிராத்மாவை, ஒளிநிலையாக மாற்றும் ஆற்றல், விஞ்ஞானிகளுக்கு இல்லை.

ஞானிகள், மகரிஷிகள்   தங்கள்   தபோவலிமைகளினாலும், தியானங்களினாலும், பேரண்டத்தில் பரவிக் கிடக்கும், பேராற்றல்களின் உணர்வலைகளின் உண்மை நிலைகளைக் கண்டறிந்து,  தங்களின் புலனறிவால் அந்த பேராற்றல்களின் உணர்வலைகளை, தவ தியானங்களால் உடல்களில் சேர்த்து வளர்த்துக் கொண்டதால், சந்தர்ப்பவசத்தால் தங்களுக்குள் தீய, கோப, குரோத ஆத்திர குணங்கள் போன்ற உணர்வலைகளைச் சுவாசிக்க நேர்ந்தால், அவைகளை மாய்த்துவிடுகின்றனர்.

அவ்வாறு தங்களின் உடல்களில், பேராற்றல் மிக்க உணர்வலைகளை வளர்த்துக் கொண்டு, உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கள் சொல்லாலும், செயலாலும், வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பேராற்றல்கள், ஒளியலைகளாகக் காற்றில் பரவிக் கொண்டிருப்பதும், மேலும் தங்கள்  உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டு, உடலை விட்டு விண்ணை சென்றடைந்து, சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கின்றார்கள். அதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி, ஒளியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள், பரவெளியில் பரவிக் கொண்டே இருக்கின்றன.

மேற்கூறிய நிலைகளை, எம் குருநாதர் காட்சியாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும், உணர்த்தி உபதேசித்து அருளியதை, யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

மெய்ஞானிகள், மகரிஷிகள் உபதேசித்து அருளிய, ஒளியான உணர்வுகளையும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்,  ஒலி, ஒளியான ஆற்றல் மிக்க உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற்று, உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று,  உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற,  எம் குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்.

(பக்கம் 171-176)

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், முதலில் விநாயகர் கோவிலுக்குச் சென்று, விநாயகரைப் பார்த்து,
“ஓம் ஈஸ்வரா’ என்று உயிரை நினைத்து,
வானை நோக்கிப் பார்த்து,
இவற்றையெல்லாம் அருளிய, மகரிஷிகளின் அருளாசியை
நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று ஏங்கவேண்டும்.
பின், கண்களை மூடி, துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை, எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும், என்ற உணர்வுடன், உடலை நினைக்க வேண்டும்.

பின், கண்களைத் திறந்து, தீப ஆராதனை காட்டும் பொழுது, வழியறிந்து செயல்படும் ஞான நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கவேண்டும். அங்கிருக்கும் மலரைப் பார்த்து, மலரின் நறுமணம் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கிவிட்டு, கனிகளைப் பார்த்து, இக்கனிகளின் சுவை போன்று, எங்கள் சொல்லும் செயலும், சுவை பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணி ஏங்கவேண்டும்.

பின், இங்கு வருபவர் அனைவரும், மகரிஷிகளின் அருளாசி பெறவேண்டும் ஈஸ்வரா, அவர்கள் வாழ்வில், நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணி ஏங்கவேண்டும்.

தியானம் இருந்துவரும் அனைவரும், கோவிலுக்குச் செல்லும் பொழுது, முதலில் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று, மேலே குறிப்பிட்டவாறு தியானித்துவிட்டு, அடுத்து உள்ளே செல்லும் பொழுது,
கோபுர வாயில் முன் வந்தவுடன், கோபுரத்தைப் பார்த்து,
என்னில் உயர்வான எண்ணம் பெறவேண்டும்
என்று எண்ணி ஏங்கவேண்டும்.

பின், இதே உணர்வுடன் யாருடனும் பேசாமல், பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து, சன்னதிக்கு முன் அமைந்திருக்கும் கொடிக்கம்பம் அல்லது, தூபஸ்தூபி இருக்கும் இடத்தில், ஒரு நிமிடம் நின்று, சன்னதியை நேராகப் பார்க்க வேண்டும்.

அப்பொழுது, இந்த தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்ற ஏக்க உணர்வுடன் உங்கள் உயிரை நினைத்து, வானை நோக்கிப் பார்க்கவேண்டும். வானை நோக்கிப் பார்க்கும் பொழுது, இந்த தெய்வ குணத்தை அருளிய, துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்ற உணர்வுடன் ஏங்கியவாறே கண்களை மூடி, துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை, நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்ற உணர்வுடன், உடல் முழுவதும் ஒரு நிமிடம் தியானித்துவிட்டு, கண்களைத் திறந்து, ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்.

பிரகாரம் வலம் வரும் பொழுது, இந்தத் தெய்வ குணமாக, எங்கள் சொல்லும் செயலும் இருக்க வேண்டும், என்ற உணர்வுடன் வலம் வந்து, மூலஸ்தானம் வந்தவுடன், இதே உணர்வுடன், மூலவரைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

கற்பூர, தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது,
வழியறிந்து செயல்படும்
இந்த ஜோதி நிலை பெறவேண்டும் ஈஸ்வரா
என்ற உணர்வுடன் பாருங்கள்.
அப்போது மூலவருக்கு, சாத்தப்பட்டுள்ள மலர் அலங்காரம், தெரியும் அச்சமயம், இந்த மலரின் நறுமணம் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்ற உணர்வுடன் ஏங்குங்கள்.

அங்கே படைத்துள்ள கனிகள் நமக்குத் தெரியும். அப்பொழுது அந்தக் கனிகளைப் பார்க்கும் பொழுது, கனிகளின் சுவையைப் போன்று, எங்கள் சொல்லும் செயலும், சுவை பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுடன் எண்ணி ஏங்கி, ஒரு நிமிடம் கண்களை மூடி, எங்கள் ஜீவான்மாக்கள் இந்தத் தெய்வ நிலை பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் செலுத்த வேண்டும்.

பின் கண்களைத் திறந்து, இங்கு வருபவர்கள் அனைவரும் இந்தத் தெய்வ நிலை பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வுடன் சொல்லிவிட்டு, சன்னதியில் இருந்து வெளியில் வந்தபின், ஆலயத்தில் அமைதியான இடத்தைப் பார்த்து, ஓரமாக அமர்ந்து கொண்டு, மேற்குறிப்பிட்டவாறு, ஐந்து நிமிடம் கண்களை மூடி, தியானிக்க வேண்டும்.

பின் கண்களைத் திறந்து, இந்த ஆலயத்திற்கு வரும் மனிதர்களின் உடல்களை, ஆலயமாக எண்ணி, அந்த உடல்களை இயக்கி ஆண்டு கொண்டிருக்கும் உயிரைக் கடவுளாக எண்ணி, இங்கு அருள் பெற வரும் உயிராத்மாக்கள் அனைவரும், துருவ மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று, நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை, ஆலயங்களில் படரச் செய்யுங்கள்.

இந்த முறைப்படி ஆலயங்களுக்குச் சென்று, வழிபட்டு தியானிப்பதால் ஞானிகள், மகரிஷிகள் உபதேசித்த அருள் சக்திகள் உங்கள் ஆத்மாவில் சேருகின்றன. அதனால், உங்கள் ஆத்மா தெய்வ நிலை பெறுகின்றது.

நீங்கள் ஆலயத்தில் பத்து நிமிடம் தியானத்தில் அமர்ந்து, ஆலயத்திற்கு வரும் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா, என்ற உணர்வுடன் படரச் செய்த மூச்சலைகளால், ஆலயத்திற்கு வரும் அனைவரும், அவர்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற, உதவி செய்தவர்களாவீர்கள்.

வாழ்க்கையில் நல்லதையே செய்து கொண்டு எவருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலும், சந்தர்ப்பவசத்தால் எதிர்பாராது பயந்துவிடுகிறோம். அச்சமயம், பய உணர்வலைகள் நம் உடலில் சேர்ந்து விடுகின்றது.

நண்பர் ஒருவர் நம்மைப் பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை, வேதனையுடன் சொல்லுகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் வேதனையுடன் சொன்ன உணர்வலைகள், நம் உடலில் சேர்ந்து, நம்மையும் வேதனைப்படச் செய்துவிடுகின்றது.

இவ்வாறு, நாம் தவறு செய்யாமலேயே,
நம் வாழ்க்கையில் பல துன்பங்கள், பலவித வேதனை உணர்வுகள்
நம்மையறியாது சூழ்ந்து கொண்டு, மன அமைதியைக் குலைக்கின்றது.
ஆகவே, துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் துன்ப உணர்வுகளைப் போக்கவே,
ஞானிகள், அன்று ஆலயங்களை அமைக்க உதவினார்கள்.

ஆகவே, ஆலயங்களுக்குச் சென்று, துன்பங்களையும், வேதனைகளையும் சொல்லி, முறையிடாதீர்கள். உங்களை அறியாது முறையிடுவதால், இந்தத் துன்ப உணர்வலைகள், அங்கு வரும் அனைவருக்கும் துன்பத்தைக் கொடுத்துவிடும்.

ஆலயங்களுக்கு வரும் அனைவரின் உடலையும் கோவிலாக மதித்து, அவர்களின் உயிரைக் கடவுளாக எண்ணி, இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இங்குள்ள தெய்வ குணங்களைப் பெற்று, நலமுடனும், வளமுடனும், வாழ அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணி வேண்டிக் கொள்ளுங்கள்.

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்து, வீட்டு முற்றத்தில் அமர்ந்து, ஐந்து நிமிடம் தியானித்துவிட்டு, நம் குடும்பத்தில் அனைவரும் தெய்வ குணம் பெறவேண்டும். நம்மிடம் வியாபார நிமித்தம் வருபவர்கள் நலமும் வளமும் பெறவேண்டும். நாம் தொழில் செய்யும் இடங்கள், செழித்தோங்க வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணிவிட்டு, கோவிலிலிருந்து கொண்டு வந்த திருநீறு, மலர்களை, நீருள்ள சொம்பில் போட்டு, மேற்கூறிய உணர்வுடன், அந்த நீரை வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்துவிடுங்கள்.

இவ்வாறு செய்வதால், வீட்டில் உள்ள தீய உணர்வலைகள் மறைந்து, நல்ல உணர்வலைகள் படரும்.
வீடு கோவிலாகிறது. உங்கள் எண்ணம் தெய்வமாகின்றது.
உங்கள் உயிர் கடவுளாகிறது.

இவ்வாறு தியானமிருந்து வரும் அனைவரும், குடும்ப சகிதம் தியானமிருந்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று, ஆத்ம சுத்தி செய்து கொண்டு, மனம் அமைதி பெற்று, எண்ணம், சொல் செயல் வலுப்பெற்று, சொல்வாக்கு, செல்வாக்குப் பெற்று, உங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற்று, நீங்கள் செய்யும் தொழில், நலமும் வளமும் பெற்று, உங்களிடம் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும், நலமும் வளமும் பெற்று, உங்கள் பேச்சும் மூச்சும், உலக மக்கள் நலம் பெற உதவட்டும்.

நீங்கள் தொழில் செய்யும் இடங்களில், உங்கள் சொல்லால், செயலால், அன்பும் பண்பும் மலரட்டும். உங்கள் பேச்சும் மூச்சும், தெய்வ நிலை பெறட்டும். கணவன் மனைவி, இணைந்து  துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெற்று,  உயிருடன் ஒன்றி ஒளியாகி, பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைய, எல்லாவற்றிலும் எல்லாமாய்க் கலந்துள்ள, நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் பிரார்த்திகின்றேன்.