ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 6, 2013

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்

அகஸ்திய மாமகரிஷி, போகமாமகரிஷி, வான்மீகி மகரிஷி, வியாசக பகவான், இவர்கெளெல்லாம் தனக்குள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளை, துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாய்ச்சினார்கள்.

அப்படிப் பாய்ச்சி, துன்பத்தை நீக்கி, அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து, அந்த உணர்வுகளைச் சுவாசித்துத்தான், உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள் அந்த மாமகரிஷிகள்.

அதே சமயம், சந்தர்ப்பத்தாலே விண் சென்ற துருவ மகரிஷி, சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்தியை தங்கள் உடலிலே அதை விளைய வைத்து, வளர்த்து, இந்த மனித வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களை மாற்றி, தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் பலர்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி விண் சென்றவர்களைத்தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று புராணங்களிலேயும், காவியங்களிலேயும் காட்டியுள்ளார்கள்.

ஆக, சப்தரிஷி மண்டலத்தை அணுகி
எண்ணிலடங்காத நிலைகள் கொண்டு,
நம் பூமியிலே தோன்றிய மனிதர்கள்
உயிராத்மாவை ஒளியாக மாற்றி
இன்று சப்தரிஷி மண்டலத்துடன்
ஒரு பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.
அங்கே சென்றடைவது தான் நமது எல்லை.