ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2013

மூதாதையர்களின் சாப அலைகளிலிருந்து மீளும் வழி

சில குடும்பங்களில் மூதாதையர்களுடைய நிலைகளில், நான்கு தலைமுறைக்கு முன்னால், ஒருவருக்கொருவர் போரிட்டு சாபமிட்டிருப்பார்கள்.

அதாவது, நான் எப்படி மூச்சுத் திணறி வேதனைப்பட்டேனோ,
என் குடும்பம் சின்னாபின்னமானதோ
அதே மாதிரி, உன் குடும்பமே இப்படி ஆகும் என்று
தன்னையறியாமலே சாபமிட்டிருந்தால், அந்த உணர்வுகள், நம் குடி வழி, இன்று நாம் தவறு செய்யவில்லை என்றாலும் கூட, நம் உடலுக்குள் அது புகுந்து, ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிகமாக வந்துவிடும்.

இதைத் தடுக்க வேண்டுமென்றால், மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை நமக்குள் வலு சேர்த்து, நாம் கூட்டுக் குடும்ப தியானம் செய்து, வாரத்தில் ஒரு நாள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்,

இவ்வாறு, நம் மூதாதையர்களைச் சொல்லி விண் செலுத்தினால், அப்போது, சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய ஒளி அலைகளுக்குள் பட்டவுடனே, மனிதன் இன்னொரு உடல் பெறும் நிலைகளைத் தீண்டி, கருக்கிவிடுகின்றது.

இப்பொழுது, நாம் எப்படி ஒளிச்சரீரம் பெற, இந்தச் சரீரத்திற்குள் இருந்து எண்ணுகின்றோமோ, இதைப்போல
சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய,
அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை
அந்த உயிராத்மாக்கள் (மூதாதையர்கள்) சுவாசித்து,
ஒளிச்சரீரம் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.

அப்பொழுது, நாம் எண்ணும்போதெல்லாம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து, சுலபமான நிலைகளில் பல சக்திகளை நாம் பெறமுடிகின்றது.

அவ்வாறு நாம் பெற்றால், இந்த வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீக்கி, நாம் இந்த உடலைவிட்டுச் சென்றால், நாமும் சப்தரிஷி மண்டலுத்துடன் இணையலாம். இதுதான் அன்று மகரிஷிகள் காட்டிய நிலைகள்.

ஆகையினாலே, இன்று மனிதனாகப் பிறந்த நாம், இந்த உணர்வின் ஆற்றலை நாம் பெருக்குவதற்கு, ஒவ்வொரு நிமிடமும் மூதாதையர்களை விண்  செலுத்த வேண்டும்,

நாம் இந்தக் கூட்டுக் குடும்பத் தியானங்களிலே, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று, நம் உடலில் வரக்கூடிய விஷத்தன்மையை நீக்கி, அந்த ஒளித்தன்மையைப் பெறுவதற்குண்டான நிலைகளை, நாம் மேற்கொள்ள வேண்டும்.