ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 9, 2015

உடலுக்குள் பித்தம் ஏன் அதிகமாகின்றது...? அதை எப்படித் தணிப்பது...?

வெறுப்பான உணர்வுகளை நாம் நுகரும்போது என்ன நடக்கிறது?

நாம் நுகரும் அந்த விஷத்தின் தன்மை கொண்ட உணர்வுகள் நம் உடலுக்குள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
நல்ல அணுக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து,
உடலுக்குள் போர்முறை வந்து,
கலக்கமும் பயமும் அதிகமாகி
சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

மனிதன் சிந்தனை இழக்கப்படும்பொழுதுதான் எதையும் சீராகப் பயன்படுத்த முடியாத நிலை வருகிறது.

மனித மனம் சீர்கெட்டால் சிந்திக்கும் தன்மை இழந்து உணர்வைச் சமப்படுத்தி அந்த உணர்வைச் சமைக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. அதில் குற்றங்கள் இருந்தால் சுவை கெடுகின்றது. சுவை கெட்டால் வேதனைப்படுகின்றது.

வேதனை என்பது விஷம் ஆக, வேதனையானால் விஷத்தின் தன்மை அதிகரிக்கின்றது. இந்த விஷத்தின் தன்மை அதிகரிக்கும்போது உணர்ச்சிகள் தூண்டும்.

ஆக, பித்த சுரபிகள் அதிகமாகச் சேர்த்து அதில் விஷம் கலந்த நிலைகள் நம் இரத்தங்களிலே கலக்கப்பட்டு அஜீரணக் கோளாறு வர இது காரணமாகின்றது.

இதைப்போன்று, நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யவில்லை என்றாலும் பிறர் செய்யும் தவறுகளை நாம் நுகரப்படும்பொழுது நுகர்ந்த உணர்வுகள் அதன் ஆணைப்படி நமது சொல்லும் செயலும் அமைந்து நம் உடலின் இயக்கம் அதுவாக மாறிவிடுகின்றது.

நம் இரத்தத்தில் கலக்கப்படும்பொழுது அந்த அமிலங்கள் தீமைகளை விளையவைக்கும் உணர்வாக மாற்றிவிடுகின்றது. உதாரணமாக பாலுக்குள் பாதாமைப் போட்டு ஒரு துளி விஷத்தை இணைத்தால் பாதாமிற்கோ பாலுக்கோ சக்தி இல்லை.

இதைப்போல வேதனையை நுகர்ந்தறிந்து இப்படிச் செய்கின்றார் என்று அறிந்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் தெய்வ ஆணையாகி, வேதனை உணர்ச்சிகள் நமது உடலில் சேர்க்கப்பட்டு நம் சொல்லும் செயலும் அமைத்து நம் உடலுடன் கலக்கப்படும் பொழுது உணர்வும் பாழ்படுகின்றது. இந்த உணர்ச்சி நம்மைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

இதைப்போல உடலில் உள்ள அணுக்கள் பகைமை கொண்டு எதிர்மறை கொண்டு வாழத் தொடங்குகின்றது. நாம் சீராக உணவு உட்கொண்டு வாழ முடிவதில்லை.

பசி எடுக்கும். ஆனால், உணவு உட்கொள்ள முடியாது.
ஆக, பசியின் தன்மை கொண்டு பித்தம் அதிகமானால்
உமட்டல் என்ற உணர்வு அதிகரிக்கும்.

இதுபோல மனிதனின் வாழ்க்கையில் சகஜ வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளையோ நம் குடும்பத்தில் ஏற்படும் நிலைகளில் அடிக்கடி வேதனைப்பட்டோம் என்றால், இதைப்போல உணர்வுகள் உருவாக்கப்பட்டு
அஜீரணக் கோளாறாகி வயிறு உப்புவதும், வாயு அதிகமாவதும்
ஜீரணசக்தி குறைவதும் போன்ற நிலை ஏற்படுகின்றது.

மேலும் குடலுக்குள் பாதுகாப்பாக இருக்கும் அமிலங்களை இது மாற்றி, உணவு உட்கொள்ளும்போது நமக்குள் எரிச்சல் ஊட்டுவதும், அதனால் உணவு உட்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகின்றது.

இதைப்போன்ற நிலைகளிலெல்லாம் இருந்து விடுபடுவதற்கு உங்களுக்கு கொடுத்த பெரும் ஆயுதத்தை ஆத்ம சுத்தியை அவ்வப்போது நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவநட்சத்திரத்தின் அருளைப் பெறுங்கள். ஆக, தான் வாழ்ந்த காலத்தில் நஞ்சை வென்றவன் அகஸ்தியன். நமது குரு காட்டிய அருள்வழியில் அதைப் பெறும் தகுதி ஏற்படுத்திடவே குரு வெளியிட்டார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அகஸ்தியனின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும். அகஸ்தியன் இருளை அகற்றி நஞ்சை வென்று துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெறவேண்டும் என்று ஒரு சிறிது நேரம் இந்த உணர்வினைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

அப்படிக் கூட்டும்போது, எப்படி ஒரு துணியில் பட்ட அழுக்கினை நாம் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அந்த அழுக்கினை நீக்குகின்றோமோ,
இதேபோல நம் உணர்வின் தன்மையை அதிகரித்து
நம் உணர்வினை வலுவாக்கி
நமக்குள் தீமை என்ற உணர்வு
சுவாசிக்கும் நிலைக்கு வராதபடி
முன்பகுதியில் உள்ள ஆன்மாவைத் தூய்மை செய்துகொள்ள முடியும்.


ஆக, துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கும் போது உடலுக்குள் தொக்கியுள்ள இந்த விஷத்தின் தன்மையைத் தனித்து நம்மைச் சிந்தனையுடையவராக மாற்றும்.