ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 22, 2017

நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

சில வீடுகளில் “இப்படிப் பேசுகிறானே..., உருப்படுவானா..” என்று சொல்லிச் சொல்லி.., இவர்களே உருப்படாமால் பண்ணிக் கொள்வதைப் பார்க்கலாம்.

இந்த மாதிரிப் பேசுகிறவர்கள் உடல்களிலே நிறையச் சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சண்டை வரும். குழந்தைகளிடம் வெறுப்படைவார்கள். இவர்கள் எண்ணமே உதவி செய்வதற்கு மாறாகப் பிரித்துவிட்டுவிடும்.

நண்பர்களிடமும் இதே போன்ற உணர்வுகளைத் தோன்றச் செய்து, பிரித்துவிடும். எப்பொழுது பார்த்தாலும், இதேபோல “உருப்படுவானா?” என்று சொல்வதைக் கேட்டு, நண்பர்களுக்கும், இவன் உருப்படுவானா? என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்.

ஆக அவர் இவ்வாறு காரம் என்ற நிலைகளை எடுத்தால் நோய் என்ற நிலைகள் விளைகின்றது. அதனை நாம் எடுத்தால் நமக்குள்ளும் அதே நிலையாக மாற்றும். 

ஆகையினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் நமக்குப் பாதுகாப்பு தேவை.

ஒவ்வொரு நொடியிலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதன் வழி நமக்கு இந்த உண்மையின் நிலைகள் வரும்.

நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.நம்மிடம் வேலை செய்பவர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்.
3.தொழிலில் நல்ல நாட்டம் வரவேண்டும்,
4.தெளிவான மனம் பெறவேண்டும்,
5.தெளிவாகத் தொழில் செய்யும் அந்த எண்ணம் வரவேண்டும், என்று
6.உங்கள் இடத்திலே உட்கார்ந்து “ஒரு பார்வை...” பார்க்க வேண்டும்.

நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ அதே போன்று நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் இயற்கையில் அவர்களது குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும். பொருளாதாரத்தில் குறை இருக்கலாம். சொந்தத்திற்குள் யாராவது குறையாகப் பேசியிருக்கலாம்.

இந்த மாதிரி குறைகளைப் பேசி அவர்களுக்குள் வெறுப்பான நிலைகள் இருந்தால் நம்மிடம் வேலை பார்க்கும் பொழுது சிந்தனையிழந்து வேலை செய்யும் நிலை வரும்.

அப்பொழுது நம் பொருள்களுக்கு நஷ்டம் வரும்.

அவ்வாறு வராதபடி செய்ய வேண்டுமென்றால்... நாம் அவருக்கு அருள் உணர்வுகளைப் பாய்ச்சி, மகரிஷிகளின் அருள் சக்தியால் “நீ நன்றாக வேலை செய்ய வேண்டும்”, மகரிஷிகளின் அருள் சக்தியால், “நல்ல முறையில் உடல் ஆரோக்கியத்துடனும் சிந்திக்கும் சக்தியும் பெற்று நலமாக இருப்பாய்” என்று சொல்லி அனுப்ப வேண்டும்.

இதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தினம்  தினம் அவருக்குச் சொல்ல சொல்ல அவர் காதிலே கேட்கக் கேட்க - தினமும் வேலைக்கு வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட வேண்டும் – நாம் பதிவாக்கும் நல்ல உணர்வுகள் அங்கே இயங்கத் தொடங்கும்.

“மகரிஷிகள் அருள் சக்தியால் நீ நன்றாக இருப்பாய். தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்” என்று வாக்குகள் கொடுத்து இதே போன்று செய்யச் சொல்லிவிடுங்கள்.

சில வெறுப்பான நிலைகளோ சிந்தனையிழக்கும் நிலைகளோ அதிகம் இருந்தால் விபூதியையோ அல்லது ஒரு பொருளை எடுத்துக் கையில் கொடுத்து இதே போல சொல்லச் சொல்லி வேலை செய்யச் சொல்லுங்கள்.

இவ்வாறு செய்யச் சொன்னீர்கள் என்றால் தொழில் நன்றாக இருக்கும்.

மேலும் “எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால், நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

1.சில சமயம் இதெல்லாம் மீறி
2.நமது தொழிலில் சில குறைபாடுகளைக் கண்டால்
3.அந்தக் குறை நம்மை இயக்கிவிடக்கூடாது.

அந்தக் குறை உணர்வு வந்தவுடன் நமக்குக் கோபம் வரும் அல்லது வேதனைப்படுகின்றோம். நாம் இதை நுகர்ந்தவுடனே நமது உயிர் இந்த உணர்வை உணர்ச்சியால் உடல் முழுவதும் பரப்புகின்றது. நமது இரத்தநாளங்களில் கலக்கின்றது.

அப்பொழுது என்ன செய்கின்றது?

நமது உடலில் உள்ள நல்ல அணுக்களில் விஷத்தன்மை போன உடனே
1.அதை ஏற்க மறுக்கும்.
2.நாம் தைரியமாகச் செய்யக் கூடிய எண்ணங்களும் பலவீனமடையும்.

ஆகையினால் அவ்வாறு விடாதபடி அடுத்த நிமிடம் “ஈஸ்வரா..” என்று சொல்லி புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படரவேண்டும் என்று இரண்டு நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் (தவறாக வேலை செய்பவர்) அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். அவர் தெளிவான மனம் பெறவேண்டும். தொழிலில் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று
1.நாம் இங்கே உருவாக்கிவிட வேண்டும்.
2.அப்பொழுது அவரின் உணர்வு நமக்குள் சிறுத்துவிடுகின்றது.

பின் அவரைக் கூப்பிட்டு..., இனிமேல் “பார்த்துச் செய்வீர்கள்... சிந்தனையுடன் செய்வீர்கள்... நன்றாக நீங்கள் செயல்படுவீர்கள்...” என்று சொல்லிவிடுங்கள்.

இதனை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

ஏனென்றால் அவர் குடும்பத்தில் இருக்கும் சிக்கலால் அவர் அறியாமல் செயல்படும் பொழுது அவர் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நமது உடலிலும் கலக்கின்றது.

சேற்றில் விழுந்து வருபவர்களைக் கட்டித் தழுவினால் எப்படி இருக்கும்...!

நம் உடலிலும் சேறாகிவிடும்.

ஆகையினால் அந்தச் சேற்றை நீக்கக் கூடிய அளவிற்கு நம் உடலில் ஒட்டிவிடாதபடி அதனைச் செயல்படுத்த வேண்டும். தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுது ஒவ்வொரு கெட்ட குணத்திலேயும் அதை அடக்கக்கூடிய சக்தியாக..., “நமது எண்ணம்...” வருகிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உயிரில் பட்டவுடன், இது கலந்து
1.அவர் நல்ல குணம் வளரவேண்டும் என்கின்ற பொழுது
2.இதையே நமது உயிர் நல்ல அணுக்களாக “நமது உடலில்” மாற்றுகின்றது.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமையின் நிலை வந்தாலும் நமது உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்திலுமே அந்த உணர்வு அனைத்தையும் சேர்த்து நல்லதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்திற்கு வர வேண்டும்.

மிளகாய் தனியாகக் காரமாக இருந்தாலும் குழம்பில் போட்டவுடன் ருசியாகிவிடுகின்றது. உப்பு தனியாகக் கரித்தாலும் குழம்புடன் சேர்க்கப்படும் பொழுது தணிந்து விடுகின்றது. 

இதே போல நாம் தொழில் செய்யும் இடங்களில் பலவிதமான நிலைகள் இருந்தாலும் நாம் இது போன்று செய்து பழக வேண்டும். தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.