ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2017

“ஒரே… எரிச்சலாக இருக்கின்றது…” என்போம்- நமக்கு ஏன் எரிச்சல் வருகின்றது?

இரக்க உணர்வு கொண்ட நிலைகளில் நமது ஆவலாலும் ஆசையாலும் நல்லது செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.

அப்படி இந்த உடலுக்குள் ஆசை பாசம் என்ற நிலையில் பிறரைக் காக்கவேண்டும் என்ற நல்ல உணர்வு கொண்டவர்களுக்கு என்ன ஆகின்றது? தீமைகளிலிருந்து காத்துவிட்டாலும் தீமையைத் தீமை என்று நுகர்ந்தோம் அல்லவா…, அப்பொழுது அந்தத்
1.(பிறிதொரு) தீய உணர்வுகள் அவர்கள் உடலுக்குள் சேர்ந்துவிடுகின்றது
2.அதே உணர்வுகள் மீண்டும் அவர் ஆன்மாவாக மாறிவிடுகிறது
3.அந்த ஆன்மாவிலிருந்து அவர்கள் சதா சுவாசிக்கும் பொழுது
4.அவரின் உயிரான ஈசனுக்கு அவர்களையறியாமலேயே
5.தீய உணர்வுகளை அபிஷேகிக்கின்றனர்.

சுடு தண்ணீரை நம் மேலே ஊற்றினால் எப்படி இருக்கும்? மிளகாயைப் போட்டு நீரில் காய்ச்சி அதைக் கலக்கி நம் மேல் ஊற்றினால் எப்படி எரியும்? எப்படி வேதனைப்படுவோம்?

இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களுக்குள் எதிர் நிலையாகும் பொழுது உடலில் எரிவது போல் உணர்ச்சிகள் இயக்கும்.

ஆக அந்த உடலை இயக்கும் உயிருக்கும் இந்த உணர்வான நிலைகள் நாம் சுவாசிக்கும் பொழுது அங்கே எரிச்சலாகின்றது. அங்கே எரிச்சலாகும் பொழுது
1.உடல் முழுவதும் எரிச்சலும்
2.நல்ல எண்ணங்களை எண்ண முடியாத நிலையும்,
3.உடலான சிவனுக்குள் எரிச்சல் ஊட்டும் நிலையாக அந்தச் சக்திகள் மாறுகின்றது.

எரிச்சலை நீக்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் சுவாசித்து, அதை நம் உடல் முழுவதும் படரச் செய்யவேண்டும். அதை நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் படரச் செய்யவேண்டும்.

அதன் பின் நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். அந்த உணர்வலைகளை மூச்சலைகளாகப் படரச் செய்ய வேண்டும். அப்பொழுது
1.யாருடைய தீமையான உணர்வுகளும் நம் ஈர்ப்பிற்குள் வராது,
2.நம் ஆன்மா பரிசுத்தமடைகின்றது.
3.நம் ஆன்மா நலமானால் நம் உடலும் மகிழ்கின்றது.
4.நம் மனமும் மகிழ்ச்சி அடையும்.

நமது சரீமே சிவமாகின்றது. ஆலயங்களில் சிவனை வணங்குவது என்றால் அங்கே நாம் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் என்று ஈசனுக்கு அபிஷேகம் செய்கின்றோம்.

மகரிஷிகள் வளர்த்த உயர்ந்த குணங்களையும் மகிழ்ச்சி பெறும் உணர்வின் எண்ணங்களையும் நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள் நல்ல வினையாகச் சேர்கின்றது.
1.நல் வினையின் நல் மணமாக,
2.வினைக்கு நாயகனாக
3.உடலின் ஆறாவது அறிவாக
4.அந்த ஆன்மாவிற்கு வினையாகச் சேர்கின்றது.

நாம் ஈசன் வீற்றிருக்கும் இந்த உடலான ஆலயத்திற்குள் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் அபிஷேகம் செய்து நம்மை அறியாமல் இயக்கும் சர்வ தீமைகளிலிருந்து விடுபட்டு மன பலம் பெற்று மன வலிமை பெற்று உடல் நலம் பெற்று மன மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

எமது அருளாசிகள்.

“அதிகாலையில் கடவுளின் தரிசனத்தைக் காணலாம்…” என்று எல்லோரும் சொல்கிறார்கள் ஏன்?

மகரிஷிகள் இந்த உலகப் பற்றை உடலின் பற்றை விட்டுவிட்டு உயிரின் பற்றிலே சென்றவர்கள் உடல் பற்றாக இருப்பதை விட்டு உயிர் பற்றை வளர்த்தவர்கள்.

“உயிரின் சேர்க்கை” அதாவது உயிரின் ஒளியால் உணரப்பட்ட உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றப்படும் பொழுது உயிருடன் ஒன்றிய சேர்க்கை – ஒளி.

அவ்வாறு ஒளியானவர்கள் மகரிஷிகள்.

அந்த நிலைகளில் குருநாதர் காட்டும் இந்த நெறியை நாம் அனைவரும் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஏனென்றால் விண்ணுலக ஆற்றலை இந்த மண்ணுலகில் வந்து அதனைத் தனக்குள் கண்டான் விஞ்ஞானி. மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான்.

அதே சமயத்தில் இராக்கெட்டை ஏவும் போது இந்தப் பூமியின் ஈர்ப்பு நிலை சுற்று அதைப் போல பன் மடங்கு வேகத் துடிப்பினை உந்து விசையாக்கி அனுப்புகின்றான்.

புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே “மிதக்கும் நிலை” வருகின்றது.

எந்த வேகத் துடிப்பின் நிலை கொண்டிருக்கின்றானோ அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.

இதைப் போலத்தான் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்தான். “அகஸ்தியன் கண்டுணர்ந்ததை” இதனுடன் இணைத்துப் பதிவு செய்து கொள்ளத்தான் இதைப் பதிவாக்குகிறோம்.
1.குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார்.
2.அதை யாம் இப்பொழுது உங்களுக்குள் இணைக்கின்றோம்.

அணுவின் ஆற்றலைத் தனக்குள் அறிந்த அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதையும் சேர்க்கின்றார்.

நமது பூமி தனக்குள் இழுக்கும்போது இடைமறித்து உணர்வை நுகர்ந்து அந்த வலுவைப் பெறுகின்றார். அதனால்தான்
1.அதிகாலையில் 4.00 மணிக்குத் துருவ நட்சத்திரத்தை இடைமறித்து
2.அந்த வழிகளில் உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.

மற்ற மதங்கள் 4.30 மணிக்கு கடவுளின் தரிசனத்தைக் காணலாம் என்று சொல்வார்கள். அது இதெல்லாம் தெரிகிறது என்று, இந்து மதத்திலும் சொல்வார்கள். ஆனால் மூலம் தெரியாது. ஏனென்றால் மறைக்கப்பட்ட உண்மையைத் தான் நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகையினால் இதைக் கடந்து சென்று அந்த மெய் உணர்வின் தன்மையை உங்களிடம் பதிவு செய்வதற்குத்தான் இதைச் செய்வது.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாக வளர்ச்சியாக அந்த மகரிஷிகள் கண்ட உண்மைகளை இங்கே வளர்க்கின்றோம். இந்த மனித வாழ்க்கையில் இருளைச் சேர்ப்பதை நாம் இப்பொழுது விலக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அங்கிருக்கும் பொருள் தெரிவது போல் அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகளை நமக்குள் ஒளியாக மாற்றும்போது நம்மை அறியாது பிறிதொரு உடலில் விளைந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது என்பது தெரிகின்றது.

திடீரென்று “ஒருவர் ஏதாவது சொல்லிவிட்டார்… என்றால் நம்மால் அடக்க முடிகின்றதா…?” அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்தபின் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து நமக்குள் சேர்க்கப்படும்போது நமக்குள் அந்த உணர்வின் இயக்கத்தையும் உணரமுடிகின்றது.

ஏனென்றால் பிறிதொரு உணர்வு நமது தெளிந்த அறிவை அது மறைக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது.

இருளிலிருந்து விடுபட முடியாத போது அருள் ஒளி என்ற உணர்வைச் சேர்க்கும்போது
1.அந்த ஒளி கண்டபின்
2.இருளிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கின்றது.

அதனால்தான் உங்களை அதிகாலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

1.நம் நினைவினை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து
4.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.
5.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும்.

“மகாபாரதத்தையும்… அதற்குள் கீதா உபதேசத்தையும்…” காவியமாகப் படைக்கும் ஆற்றல் ஒன்றுமறியாத மீனவனுக்கு எப்படி வந்தது? – வியாசக பகவான்

நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரிலே பட்டவுடன் அந்த நாதங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வின் அலைகள் கொண்டு தான் நாம் பேசுகின்றோம். அந்த உணர்வின் நாதங்கள் தான் நம்மை (உடலை) இயக்குகின்றது.

நீரை வெப்பமாக்கிக் கொதிக்கச் செய்யும் பொழுது சப்தங்கள் வருகின்றது.

இதே போன்று நம் உயிரின் துடிப்பான வெப்பத்திற்குள் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் பட்டவுடன் இந்த உணர்வின் ஆற்றல் நாதங்களாக இயக்குகின்றது.

1.நாம் எத்தகைய குணத்தின் தன்மை கொண்டு சுவாசிக்கின்றோமோ
2.அது நமக்குள் நாத ஒலிகளாக எழுப்பி
3.அந்தத் தொனிக்குத் தக்கவாறு  நம் உடலை இயக்குகின்றது.

ஒருவர் கோபமாகப் பேசுகின்றார் என்று காதிலே கேட்டவுடன் செவிப்புலன் இயக்கி அந்த உணர்ச்சிகள் தூண்டுகின்றன. அதே போன்று ஒரு மகிழ்ச்சியான சொல்களைச் சொல்லும் பொழுது செவிப்புலனில் ஈர்க்கப்பட்டவுடன் அந்த உணர்வுகள் நம்மை மகிழச் செய்கின்றன.

ஏனென்றால் அந்த உணர்வின் அலைகள் நமக்குள் அவ்வாறு இயக்குகின்றன.

“சப்தரிஷி” (சப்த+ரிஷி) – உயர்ந்த ஆற்றல்மிக்க நாதத்தின் நிலைகள் கொண்டு உள்ளடக்கி ஒளியின் சரீரமாகப் பெற்ற அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு அணுவின் தன்மை தான் “நாரதன்” என்று பெயர் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அவருக்கு வீணையைக் கையில் கொடுத்து மனிதனுடைய ரூபத்தைப் போட்டுக் காட்டினார்கள்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய அந்த ஒளியான அணு நாரதன் என்பது
1.அது எத்தகைய ஆற்றல் பெற்றதோ
2.அந்த உணர்வின் நிலைகள் கொண்டு விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் “மெய் உணர்வு”.

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் வியாசர் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலால் சிக்கப்பட்டுக் கடலில் வீழ்ந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்.

அப்பொழுது தான் காக்கப்பட வேண்டும் என்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணர்வின் எண்ணத்துடன் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதே உணர்வு கொண்ட மீனின் (டால்பின்) உணர்ச்சிகள் தூண்டி இவன் எண்ணத்திற்குப் பக்கபலமாக இருந்து இவனைக் கரைசேர்க்கின்றது.

கரை சேர்க்கும்போது இவனுடைய எண்ணத்தின் துடிப்பின் நிலைகளும் மீன் இவனைக் காத்த உணர்வும் இந்த இரண்டு உணர்வுகளும் வியாசர் உணர்வுக்குள் சேர்த்தவுடனே
1.”பயம் கலந்த… தான் தப்பித்துவிட்டோம்…” என்ற ஆற்றல்மிக்க அந்த உணர்வின் சக்தி இவனுக்குள் கூடி
2.இந்த உணர்வலைகள் தன் புலனறிவான கண்ணுக்குள் பாய்ந்து
3.எந்த மீனைக் கொன்று புசித்தோமோ அந்த மீனே தன்னைக் காத்தது என்ற
4.அளவு கடந்த ஏக்கத்தின் தன்மை கொண்டு விண்ணை நோக்கி ஏகும் பொழுது
5.அந்த உணர்வின் ஆற்றலுக்குள் சிக்கியது தான்
6.சப்தரிஷி மண்டலங்களின் ஒளியான அணு (நாரதன்).

அது ஒரு சந்தர்ப்பம். அதற்கு முன் மீனவனுக்கு ஒன்றும் தெரியாது.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் இவர் உடலிலே புகப்பட்டு இந்த உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டு இவர் சுவாசித்த உணர்வின் தன்மை இவர் உயிரிலே படுகின்றது.

உயிரிலே படும் பொழுது சப்தரிஷி மண்டலமாக இயங்கிய அந்த உணர்வின் ஆற்றல் விண்ணுலகை எப்படித் தனக்குள் கண்டறிந்ததோ
1.அந்தப் பேருண்மையினுடைய தன்மைகள் அனைத்தும்
2.இந்த வியாசனான “ஒன்றும் தெரியாத” அந்த மீனவருடைய உடலில் தென்படுகின்றது.

இந்த உணர்வுகளின் சுவாசத்தாலேதான் பேரண்டத்தின் பெரு நிலையினுடைய நிலைகளை விண்ணுலகின் ஆற்றலை “நாராயணா…” என்றும் “விஷ்ணு…” என்றும் அழைத்தார்

பேரண்டத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று இணைந்து அந்த ஆற்றல் பெற்றது. வலுவானது வலுவற்ற அணுவிற்குள் மோதியவுடனே அது தனக்குள் கவர்ந்து சென்று தனது ஆற்றலைப் பெருக்கி இப்படித்தான் பிரபஞ்சமே வளர்ந்தது.

ஒன்றுக்குள் ஒன்று சென்று ஒன்றின் தன்மை வளர்ந்து அவ்வாறு வளர்ந்து வந்த அணுக்கள் தான் பேரண்டத்தின் இயக்க நிலைகள் என்பதை வியாசர் கண்டறிந்தார்.

இயற்கையில் ஒரு அணுவின் தோற்றமும் அந்த உயிரணுவின் தோற்றத்திற்குள் கண்ணனாகத் தோன்றி
1.அந்தக் கண் ஒவ்வொரு மனிதனுக்கும் கீதா உபதேசம்
2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எப்படிச் செய்கின்றது என்பதை
3.மகாபாரதம் என்றும் அதற்குள் கீதா உபதேசம் என்றும் வெளிப்படுத்தினார்.

கண்ணால் பார்த்து நாம் நுகரும் உணர்வுகள் நமக்குள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை இயக்குகின்றது என்ற தத்துவத்தைத் தெளிவாக்கினார்.

வியாசர் படித்துணர்ந்து கற்றுணர்ந்து வரவில்லை. 

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்பட்ட ஒளியான உணர்வே இன்று நாம் அழைக்கும் மெய்ஞானியான “வியாசக பகவான்” அன்று ஒன்றுமறியாத மீனவனுடைய உடலுக்குள் புகுந்து இந்த ஆற்றல்மிக்க நிலைகளைச் செய்தது.

August 30, 2017

“கொக்கென்று நினைத்தாயா... கொங்கணவா...! – வாசுகி அம்மாள் கேட்டது

பிருகு மாமகரிஷியும் ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலும் திருவள்ளுவர் காலத்தில் தான் அவர் கொங்கணவ மகரிஷியாக வந்தது.

பிருகு மகரிஷி பல உடல்கள் மாறி மாறி  நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி அந்த ஆற்றல்மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர் தான்.

அப்படித் தேடி அலைந்து வரப்படும் பொழுதுதான் வீட்டுக்கு வீடு யாசகம் தேடிய கொங்கணவருடைய உடலில் புகுந்து அந்த ஆற்றலின் நிலைகளை இந்த உடலிலே எடுத்து வந்தார்.

பிருகு முந்தைய நிலைகளில் மனித உடலுக்குள் மந்திரத்தைச் செருகி அந்த மந்திரத்தின் நிலைகளை எடுத்து ஆற்றல் மிக்க நிலைகள் பெற்றாலும் “விண் செல்ல முடியவில்லை”.

பிருகுவாக இருக்கும் பொழுது, கோடிக்கணக்கான நிலைகள் இருந்தாலும், பல ஆற்றல்மிக்க சக்திகளை அவர் பெற்றிருந்தாலும் யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை.

கொங்கணவர் உடலிலிருந்த பிருகு மகரிஷி முந்தைய அரச நிலைகளில் அவர எடுத்துக் கொண்ட மந்திரத்தால் சில நேரங்களில் இவரை எதிர்க்கும் நிலையில் யாராவது வந்தால் தன்னுடைய மந்திர சக்தி கொண்டு அவரை அச்சுறுத்தியோ அல்லது வீழ்த்தும் நிலைகளில்தான் செயல்பட்டார்.

ஒரு சந்தர்ப்பம்… யாசகம் கேட்க அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது மேலே பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று எச்சம் இட அது இவர் மேலே படுகின்றது.

இவர் முன்பு அரசன் அல்லவா…! அந்த உணர்வின் தன்மை அவரை விட்டு நீங்கவில்லை.

இவர் போகும் நிலைகளில் கொக்கு அவர் மேலே அசுத்தப்படுத்திவிட்டது. அந்தக் கொக்கினை அவர் தன் வாக்கினாலே வீழ்த்துகின்றார்.

அப்படி அவர் வீடு வீடாகச் சென்று யாசகம் கேட்கும் பொழுது “திருவள்ளுவர்” வீட்டிற்கும் வருகின்றார். வாசுகி அம்மாள் வீட்டிற்குள் இருந்து தாமதமாக வரப்படும் பொழுது கொங்கணவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

வாசுகி அம்மாவிற்குத்தான் சக்தி அதிகம், திருவள்ளுவருக்கு அல்ல. வாசுகி தன் ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு சொல்லும் உணர்வின் ஆற்றலைத்தான் திருவள்ளுவர் எழுதி வந்தார்.

வாசுகி அம்மாள் தன் சக்தியினுடைய நிலைகள் கொண்டு கொங்கணவர் நினைத்ததை உணர்கின்றார். அவர் வெளியே வருவதற்குச் சிறிது நேரமாகிவிட்டது.

இவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். யாசகம் கேட்க வந்தாலும் அந்த “அகங்காரம்” இவருக்குள் இருந்தது. ஏனென்றால் அன்று அரசராக இருந்தவர்.

மக்களுக்காகச் சேவை செய்கிறேன். எனக்குக் கொடுப்பதற்கு தாமதமாகின்றது என்ற மன உறுமல் ஏற்பட்டு முணுமுணுக்கின்றார்.

கொஞ்ச நேரம் தாமதமானவுடன் மனதிற்குள் உறுத்தல். ஏனென்றால், அரசாட்சி செய்தே பழக்கமானவர். இவர் எந்த நிலைக்கு மாறவேண்டும் என்றாலும் அங்கேயும் அந்த நிலைகளே வருகின்றது.

அப்பொழுதுதான் வாசுகி அம்மாள் இவரிடம், “கொக்கென்று நினைத்தாயா… கொங்கணவா…?” என்றார்.

அவர் கொக்கை வீழ்த்திய நிலைகளை… ஒரு சாதாரண கிராமத்திலே ஒன்றும் தெரியாத…
1.“ஒரு பெண் சொல்கிறதே…” என்ற நிலையில் அதை உணர்த்தப்படும் பொழுது தான்
2.அவருக்கு அங்கே “ஞானம்” வருகின்றது.

தான் அரசனாக (பிருகுவாக) இருக்கக்கூடிய காலத்தில் செய்த நிலைகளிலிருந்து மீண்டு தெளிவுபடும் நிலைகளுக்கு வந்தாலும் தான் மீண்டும் ஒரு உடலிலிருந்து தெளிவு பெறும் எண்ணம் வரவில்லை.

வாசுகி அம்மாள் உணர்த்திய உணர்வின் அலைகள் வரப்படும் பொழுதுதான் கொங்கணவருக்குச் சிந்திக்கும் நிலைகள் வருகின்றது. அப்பொழுது தான் அவர் சிந்தித்து மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.

கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்” இன்றும் திருப்பதியில் உண்டு.

கொங்கணவர் தன்னிடம் எல்லா சக்தியும் இருக்கிறது என்ற நிலையில் செயல்பட்டு வந்தாலும் அங்கே வாசுகி சுட்டிக் காட்டுகின்றார்.

உண்மையை உணர்ந்து ஞானஸ்தானம் என்ற நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வந்து அங்கே குடி கொண்டு தன் நினைவின் ஆற்றலை ஒவ்வொரு நிமிடமும்
1.தனக்குள் அந்த மந்திர சக்தியினுடைய நிலைகளை மாற்றிவிட்டு,
2.சூரியனின் காந்தசக்தியைத் தனக்குள் பெறுவதற்குச் செயல்பட்டார்.

போர் முறைகளினுடைய நிலைகளாலும், மந்திர நிலைகளாலும் தான் விண் செல்ல முடியவில்லை என்று அறிந்த பின்புதான் இந்த உடலின் தன்மை கொண்டு தான் விண் செல்வதற்காக ஒவ்வொரு மனிதரையும் புனிதமாக்கும் நிலைக்கு வந்தார்.

தான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு
1.ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றியபின்
2.அவர்கள் எண்ணும் “நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே”
3.தன்னை அந்த “ஒளிச் சரீரம் பெறவைக்கும்” என்று உணர்ந்தபின் 
4.பிருகு தன் மனதைத் தங்கமாக்கக் கொங்கணவர் உடலிலே புகுந்து செயல்பட்டார்.

இன்று அவர் சொன்ன நிலைகளை விட்டுவிட்டோம்.

“மனதைத் தங்கமாக்குவதற்குத்தான்..” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு மகரிஷி ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார். 

இதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

"எனக்கு நல்லதே நடக்க மாட்டேன் என்கிறது" என்ற பிடிவாதமான எண்ணத்திலிருப்பார்கள் – நல்லதை உருவாக்கும் வழி என்ன?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மெய்ஞானிகளின் அருள் சக்திகளை யாம் பெறுவதற்குப் பல சம்வங்களை நிகழ்த்தினார். எமக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தி அதைக் கொடுத்தார்.

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சிரமங்கள் வருகின்றதோ
2.சந்தர்ப்பம் எது உங்களை இன்னலையும் மன பயத்தையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துகின்றதோ
3.அப்பொழுது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து அந்தத் துன்பத்தை விளைய வைக்கும் உணர்வின் ஆற்றலைத் தணியச் செய்யுங்கள்.

உங்கள் உடலில் வியாதியும் எண்ணத்திலே பல கலக்கமும் மன வேதனையும் மனக் குடைச்சலையும் ஏற்படுத்தும் இந்த உணர்வின் ஆற்றலை அது நம்மை ஆட்டிப்படைக்காதபடி நமக்குள் நல்லதாக மாற்றிடல் வேண்டும்.

கருணைக் கிழங்கை வேக வைத்துப் பல பொருள்களை அதனுடன் இணைத்துச் சுவையாக்கி நாம் உட்கொள்கின்றோம். அதன் மூலம் உடலுக்கு நாம் ஆரோக்கியமான நிலைகள் பெறுகின்றோம்.

அதைப் போன்று எத்தகைய துன்பங்கள் நமக்குள் வந்தாலும் அந்தத் துன்ப உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாவண்ணம் அதை அடக்கி
1.இன்பத்தின் சொல்லாலும்
2.இன்பத்தின் உணர்வுகளை நமக்குள் தூண்டி
3.விண்ணின் ஆற்றலை நாம் பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இதைப் போன்று விண்ணின் ஆற்றலைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ளலாம்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் அருளாற்றல்கள் உங்களுக்குள் பெருகும். யாம் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் மெய் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வுகள் தான்.

அந்த மெய்ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள எத்தகைய உணர்வின் ஆற்றலைத் தனக்குள் கூட்டிக் கொண்டார்களோ அத்தகைய உணர்வின் தன்மையை
1.நீங்கள் சாதாரணமான நிலையில் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே
2.உங்களுக்குள் பதியச் செய்து விடுகின்றோம்.

“ஓ...ம் ஈஸ்வரா...” என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரன ஈசனிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் பாய்ச்சுங்கள்.

இவ்வாறு நீங்கள் தியானிக்கும் பொழுது உங்கள் உடலுக்குள் துன்பத்தை விளைய வைத்த உணர்ச்சிகளை அகற்றி
1.உங்களுக்குள் ஆற்றல்மிக்க சிந்தனையைக் கிளரும் நிலையை ஊட்டும்
2.அடுத்து உங்களுக்குள் ஒரு வலுவான எண்ணத்தை ஊட்டும்.

சங்கடங்களும் கஷ்டங்களும் வரும் பொழுதெல்லாம் இந்த முறைப்படி செய்து அந்தச் சந்தர்ப்பங்களை எல்லாம் நல்லதை உங்களுக்குள் பெருக்கும் சந்தர்ப்பமாக மாற்றிட முடியும். 

இதற்குப் பெயர் தான் “தியானம்” என்பது.

இந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களை – நம் மேல் பட்ட “தூசியைத் துடைப்பதுபோலத் துடைக்க வேண்டும்”

இன்று கலி என்ற நிலைகளில் எல்லாமே கடவுளாக உருவாக்குகின்றார்கள். எல்லாமே கடவுளாக உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். “இதுதான் கலி”.

நான் ஒரு தெய்வத்தை வைக்கின்றேன். அது இது மாதிரிச் செய்கின்றது. எனக்கு இந்தக் கடவுள் இதைச் செய்து கொடுத்தார். இது போன்ற நிலைகள் கலி என்ற பெயரில் எல்லோர் மத்தியிலும் உருவாகிவிட்டது.
1.நான் உருவாக்குகின்றேன்.
2.நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன் என்று எல்லோரும் சொல்கின்றார்கள்.
3.நானே உனக்கு உள் நின்று இயக்குகின்றேன் என்று சொல்கின்றார்கள்.

இப்பொழுது நான் கூட உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று சொல்லுகின்றேன். அதனுடைய பொருள் என்ன?

யாம் உபதேசத்தின் மூலம் அருள் ஞானிகளின் ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். யாம் சொன்ன முறைப்படி இதை எடுத்ததுமே நான் கொடுத்த எண்ணங்களுக்கு வலுக் கூடுகின்றது.

பதிவாக்கிய வித்தை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால்தான் அது வேலை செய்யும்.

உங்கள் உதவி வேண்டாம் என்றால் ஒன்றும் இல்லை.

உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன் என்று நான் காப்பாற்றுகின்றேன் என்றால் நான் கடவுள் அல்ல.
1.நான் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்
2.நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள்.
3.சாமி நம்மைக் காப்பாற்றி விடுவார் என்று தான் எண்ணுவீர்கள்.

நீங்கள் நல்ல மருந்தைச் சாப்பிட்டால் அது உங்களைக் காக்கும்.

வேதனையை நீக்க வேண்டுமென்றால் வேதனையை உருவாக்கித்தான் அந்த வேதனையை நீக்க வேண்டும். அந்த மருந்து அதற்கு வேதனையை உருவாக்கும்.

சாதாரணமாக வேதனையை உருவாக்கும்போது அந்த அணு அங்கு உருவாகின்றது. இதை நல்லதாக்க வேண்டுமென்றால் விஞ்ஞான அறிவுப்படி நல்ல மருந்தைச் சேர்க்கின்றார்கள்.

இந்த நல்ல மருந்துடன் சேர்க்கப்பட்ட விஷம் உடலில் வேகமாக ஊடுருவி உடலில் அலைய ஆரம்பித்து விடும். நல்ல சத்தின் தன்மை வரப்படும்போது
1.மருந்தில் இருக்கும் விஷம் அதற்குள் போனவுடனே தேங்கி நின்று இது சேமிக்க ஆரம்பிக்கின்றது.
2.வேதனையால் உருவான நோய்க்கு (அந்த அணுக்களுக்கு) வேதனை ஆகின்றது.

அப்பொழுது மருந்து சாப்பிடும் பொழுது (ஏற்கனவே உருவான) வேதனையைக் கலைத்துவிட்டால் “அய்யோ..! அம்மா…! உடலெல்லாம் கலையுதே!” என்பார்கள்.

கலைந்த உணர்வின் தன்மை நீராக மாறும்போது சிறுநீராகப் போகும். அல்லது அந்த உணர்வின் தன்மை சீதமாக வெளியே போகும்.
1.அப்பொழுது உடம்பெல்லாம் வலிக்கும்.
2.அந்த மருந்தின் தன்மை அதனுடைய உற்பத்தியைக் குறைக்கும்.

“அய்யய்யோ…! எனக்கு இந்த மருந்து கொடுத்தார்… இப்படி ஆகிவிட்டது” என்று சொல்லிவிட்டு வேறு ஒரு மருந்து சாப்பிட்டால் என்ன ஆகும்?

இது இரண்டையும் ஏற்றுக்கொள்ளாத நிலைகளில் மீண்டும் நோயாக மாறும்.

இந்த விஷத்திற்கு இவ்வளவு பெரிய ஆற்றல். வாழ்க்கையில் நாம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் மூன்று இலட்சம் பேர்களைப் பற்றி யாம் தெரிந்து கொள்வதற்காக எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் சொன்னார்.
1.காலில் செருப்பில்லாமல் நடக்கச் சொன்னார்.
2.வெயிலில் நடக்கச் சொன்னார்.
3.இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் உந்துகின்றது என்று காட்டினார்.
4.அதே சமயத்தில் உனக்குள் ஆசைகள் வரும்போது கஷ்டங்கள் வந்தால் அது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?
5.உன்னுடைய ஆசைகள் மனக்கோட்டைகள் எல்லாம் தகர்ந்து போகும் பொழுது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?
6.இதே மாதிரி ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தெந்த அளவிலே ஈர்க்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டினார் குருநாதர்.

குருநாதர் மூலம் அனுபவ வாயிலாகப் பெற்ற கண்டறிந்த பேருண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டிக் கொண்டே வந்தால் வரும் இன்னல்களை நீக்கலாம்.

உடலுக்குப் பின் எங்கே போகவேண்டும் என்பது தெளிவாகும்.

August 29, 2017

முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய “தலையாயக் கடமை”

நாம் சிறு வயதினராக இருக்கும் பொழுது நமது முன்னோர்கள் நாம் அனைத்துத் துறையிலும் சிறந்து இருக்க வேண்டும் என எண்ணி நமக்கு பல வகைகளிலும் பாசத்தைக் காட்டி நல் அறிவினை ஊட்டி வளர்க்கின்றனர்.

ஆனால் நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துச் சொல்லும் உயர்ந்த சிறந்த அறிவுரைகளை ஒதுக்கிவிட்டு மாற்றுக் கருத்துக்களில் நாட்டம் செலுத்தி அதன் வழி செல்லும் பொழுது நமது முன்னோர்கள் வேதனை அடைகின்றனர்.

நாம் சொன்னபடி செய்யவில்லைதவறான பாதையில் செல்லுகின்றானே..., “உருப்படுவானா...?” என்று கோபமும் வேதனையும் கலந்த சொற்கள் அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன.

நாம் எல்லா நிலைகளிலும் உயர்ந்து சிறப்புற வேண்டும் என்ற அவர்களுடைய பாச உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.

அதே சமயத்தில் அவர்கள் சொல்லை மதிக்காது செயல்பட்ட நிலைகளில் அவர்கள் வெளிப்படுத்திய கோப உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.

ஒரு செடி எதிர்மறையான சூழ்நிலையைச் சந்திக்கின்ற பொழுது, தன்னுடைய வளர்ச்சியை இழக்கின்றது.

அது போன்றே நமது முன்னோர்கள் நம் மீது பற்று பாசத்துடன் இருந்தாலும் அவர்களுடைய அறிவுரைகளை மறுத்து இயங்குகின்ற பொழுது அவர்கள் கோப உணர்வு கொண்டு நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் சலிப்பு  வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் அவர்களிடம் உருவாகின்றன.

இவ்வாறு நம் மீது பாசமாக இருக்கும் அவர்களின் உணர்வின் எண்ண உணர்ச்சியின் அணுத்தன்மையில் இப்படிப் பாசம் கோபம் ஆத்திரம் என உணர்வுகள் மாறி மாறி அமைவது என்பது அவர்களின் உடலில் சீரற்ற நிலைகளை உருவாக்கி நோய்களை" அவர்களிடத்தில் உண்டாக்கிவிடுகின்றது.

மேலும் அவர்களுடைய ஆன்மா சீரற்ற நிலையில் நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் கலக்கம் வேதனை சஞ்சலம் என்ற உணர்வுகளை அவர்கள் சுவாசிக்க நேர்ந்து அவர்களுடைய சரீரத்தில் இத்தகைய எண்ண அலைகளே அதிகமாக விளைகின்றது. நல்ல உணர்வுகள் விளைவதே இல்லை.

உதாரணமாக நல்ல வயலைப் பண்படுத்தி, நல்ல விதைகளை ஊன்றினாலும் அதனிடையே களைகள் உருவாகி ஓங்கி வளர்கிறது.

அதைப் போன்றுதான் பாச உணர்வுகள் உள்ள இடத்தில் சிறிதளவு வெறுப்பிற்கு இடமளிக்கும் பொழுது அங்கே வெறுப்பான உணர்வுகளே அதிகமாகி பாச உணர்வுகளை மங்கச் செய்துவிடுகின்றன.

இவ்வாறு நம் குடும்ப வாழ்க்கையில் வேதனையுறச் செய்யும் சந்தர்ப்பங்களை அறிந்து அவற்றை விலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் முன்னோர்களின் உயிரான்மா நம் குலத்தெய்வமான அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து என்றும் நிலையான ஒளிச்சரீரம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி உந்தித் தள்ள வேண்டும்.

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்என்ற கீதையின் தத்துவப்படி   நம் முன்னோர்கள்  எதைப் பெறவேண்டும் என்று ஏங்குகின்றோமோ அதனை நாமும் பெறுகின்றோம். 

நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளிவட்டத்தில் கலந்து நிலையான ஒளிச்சரீரம் பெறவேண்டும்  என்று நாம் எண்ணி ஏங்குகிற பொழுது நமது முன்னோர்களும் ஒளிச்சரீரம் பெறுகின்றனர்.

அதனின் பயனாக நாம் நம் உணர்வின் சக்தியை விண்ணை நோக்கிச் செலுத்தினோமானால் நம் முன்னோர்களின்  உயிரான்மாக்களை விண் செலுத்த உதவிய  நம்முடைய நினைவுகள் துரித நிலையில் இயங்கி  அங்கே செல்ல ஏதுவாகும். அதன் மூலமாக
1மகா ஞானிகளின் உணர்வைத் துரித நிலையில் நாம் ஈர்க்கவும்
2.நம்மிடத்தில் வருகின்ற தீமைகளை அந்த விநாடியே அகற்றவும்
3.நமக்குள் உணர்வின் சக்தியைப் பழக்கவும்
4.மெய்ஞானிகளின் உணர்வை நம்மிடத்தில் வளர்க்கவும்
5.அந்த உணர்வுகள்  ஒளியின் சரீரமாக வளரவும் உதவி செய்கின்றன.

மேலும் ஒளி கண்டு இருள் விலகுவது போன்று அங்கே இருளுக்குள் இருக்கக்கூடிய பொருள் தெரிவது போன்று  நமது வாழ்வில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுகின்றோம்.

சப்தரிஷி என்பவர் யார்? 

ஆறாவது அறிவின் துணை கொண்டு தீயவுணர்வுகளை மாய்த்து நல் உணர்வுகளை வளர்க்கச் செய்யும் தன்மை வாய்ந்த ஏழாவது அறிவினை தன்னிடத்தில் பெற்றவர்களைச் சப்தரிஷி என்று நாம் அறிந்துணர முடியும்.

அத்தகைய தன்மை வாய்ந்த சப்தரிஷிகளின் சிறப்பை நம் முன்னோர்கள் பெற வேண்டும் என்று  நாம் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானிக்கும் பொழுது நாமும் அத்தகைய ரிஷியின் தன்மையைப் பெறுகின்றோம். சிறிது காலத்திற்காவது  நமது முன்னோர்களை எண்ணித் தியானித்திடும் பொழுது அவர்கள் சப்தரிஷி தன்மை பெற்று விடுகின்றனர்.

அதைத் தொடர்ந்து நீங்களும் ரிஷித்தன்மையைப் பெறுகின்றீர்கள். நீங்கள் ரிஷியாக வேண்டும் என்றால் முதலில், உங்கள் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்என்பதை உணரவேண்டும்.

விஞ்ஞானி ஒரு இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்புகின்றார். பின் அந்தச் செயற்கைக் கோளின் துணை கொண்டு விண்ணின் நிலையைப் பூமியில் பெறுகிறார்.

அது போன்று நாம் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை நமது எண்ணத்தின் வலுக் கொண்டு விண்ணிற்கு அனுப்பும் பொழுது அந்த ஆன்மாக்கள் பெறும் ஆற்றலை நாம் பெறமுடியும்.

பிறகு அருள் ஞானிகளின் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் ஈஸ்வரா. நாங்கள் பார்ப்பவரெல்லாம்  நலம் பெறவேண்டும் ஈஸ்வரா என்று நாம் எண்ணி இந்த உணர்வின் சக்தியை நம்மிடத்தில் வளர்க்க வேண்டும். 

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் அன்னை தந்தை காட்டிய நல்வழி அனைத்தையும் செயலாக்கி அவர்கள் எண்ணிய நல் உணர்வுகள் எங்களுக்குள் விளைந்து நாங்கள் பார்ப்பதெல்லாம் நலமும் ஆக்கமான எண்ணங்கள் எங்களுக்குள் விளைந்திட வேண்டும்.

எங்கள் சொல்லிலும் செயலிலும் புனிதம் பெறும் தன்மையாகவும் அவர்கள் காண்பித்த நல்வழியின் நிலைகள் எங்களுக்குள் ஆளவும் வளரவும் வேண்டுமென நாம் தியானிக்க வேண்டும்.

ஆகவே நம்முடைய முன்னோர்களின் நினைவு நாட்களைக் கொண்டாடி விட்டோம். அவர்களுடைய உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையவேண்டும் என்று தியானித்து விட்டோம்.

அதன் மூலம் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றி விட்டோம் என்று கருதுவோமேயானால் அதன் பிறகு நாம் வளர்வதே இல்லை. பதிலாக
1.நம்மிடத்தில் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்திய நினைவுகளும்
2.அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்ற ஏக்கமும்
3.நம்மிடம் என்றும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.